கட்டுரை

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் – ஒரு அலசல் – 1

முன்குறிப்பு

தமிழ்மணம் இணையதளத்தின் மீதும் வலைப்பூ எழுதுபவர்கள் மீதும் எமக்கு தனி மரியாத உண்டு, ஏனெனில் இதற்கு முன் பல forum களை பார்த்துள்ளேன் அங்கெல்லாம் ஆரோக்கியமற்ற ஆபாச வார்த்தைகளோடு எழுதுவர், இங்கே தான் மிக ஆரோக்கியமாக பின்னூட்டங்களும் கருத்துக்களும் எழுதப்படுகின்றன. இதுவரை மருத்துவர் இராமதாசு மீதான சொல்லடிகள் பற்றி எழுதாமல் இருந்தேன் ஏன் எனில் எனக்கு சாதிய முத்திரை குத்தப்படும் என்ற அச்சமும் அதற்குமேல் எல்லா பதிவுகளும் சாதிய கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும் என்ற அச்சமுமே காரணம். ஆனால் டோண்டு அவர்கள் தைரியமாக அவரின் சாதிப்பெயரை சொல்லியும் பதிவுகள் எழுதியும் அவருடைய நல்ல பதிவுகள் பலரால் படிக்கப்பட்டு வருவது எனக்கு தைரியத்தை கொடுத்துள்ளது,அது மட்டுமின்றி இந்த தளங்களிலே எழுதுபவர்களின் மன முதிர்ச்சியையும் காட்டுகிறது. இதுவே என்னை மருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் பற்றிய பதிலுரை எழுதலாம் என தூண்டியது, எனது என்னங்களை வார்த்தைகளாக்கி எனது பதிவை தருகிறேன். எனது பெரும்பாலான கருத்துகளை முன்னமயே வீரவன்னியன் என்ற பெயரிலே ஒருவர் எழுதிவிட்டார், அவருடைய பதிவையும் இந்த சுட்டி வழியாக படியுங்களேன் சாதிக் கட்சிகளை விலக்குங்கள்
இந்த பதிவு யாரையும் புண்படுத்தும் என்னத்தில் எழுதப்பட்டதல்ல, யாரும் Personal ஆக எடுத்துக்கொள்ளவேண்டாம், என் பதிவு யாரையேனும் சுட்டால் என்னை மன்னிக்கவும்.

மருத்துவர் இராமதாசு, இந்தியாவிலே லல்லுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தை தமிழகத்திலே இவருக்கு கொடுத்துள்ளன பத்திரிக்கைகளும் மற்றும் பலரும் ஒரு வித்தியாசத்தோடு, லல்லு எதை செய்தாலும் கோமாளித்தனமாகவும் இராமதாசு எதைச்செய்தாலும் ஆக்ரோசமாகவும் சொல்லால் தாக்குகின்றனர், இதைப்பற்றி இந்த கட்டுரையில் அலசுவோம்.

யார் இந்த இராமதாசு?

இவரின் பின்புலம் என்ன?

எப்படி இவர் தமிழக அரசியலிலே ஒரு முக்கிய புள்ளியாக உள்ளார்?

எப்படி இந்த மனிதனுக்கு இவ்வளவு அரசியல் செல்வாக்கு?

இவரையும் பின்பற்ற, இவர் சொல்வதையும் கேட்க எப்படி பல லட்சம் பேர் உள்ளனர்?

இந்த கேள்விகளுக்கான விடைகளும், அதன் பின்னுள்ள சபால்ட்டர்ன்(அடித்தட்டு) மக்களின் எழுச்சியும் தான் இன்றைக்கு பத்திரிக்கைகளாலும் மற்ற பலராலும் மருத்துவர் இராமதாசு மட்டையடிக்கப் படுவதற்கான காரணம். இதற்கெல்லாம் பதிலுரைக்க சில விடயங்களை சற்று விரிவாக பார்க்கவேண்டும்.

இராமதாசுவின் பின் புலம் வன்னிய சமுதாய மக்கள் தான்.
இது எல்லோரும் அறிந்ததுதான். அது எப்படி ஒரு சமுதாயமே கண்மூடித்தனமாக இவரை பின் பற்றுகிறது. (இதுதான் பலரின் வயிற்றெரிச்சலுக்கு காரணம், இதுவேதானமருத்துவர் இராமதாசு மீது சொல்லடியாக விழுகிறது).

முக்கியமான ஒரு தகவல், பலராலும் இதுவரை தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட விடயம், வட மாவட்டங்களிலே வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களாகவோ, நிலக்கிழார்களாகவோ இல்லை, பெரும்பாலானோர் ரெட்டியார்,முதலியார் (அ) உடையார், நாயுடு சமுதாயத்தினரின் நிலங்களில் கூலி வேலை செய்தவர்களே. எனவே பெரும்பாலான வன்னிய சமுதாயத்தினர் பண வசதிபடைத்தவர்கள் அல்ல, ஆதிக்க சாதியாகவும் இல்லை, சமுதாயம் நலிவடைந்த நிலையிலேதான் இருந்தது.

சில தசம(பத்து) ஆண்டுகளுக்கு முன் வரை எந்தவித விழிப்புமின்றி பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்திலும் நலிவடைந்தே இருந்தது இச்சமூகம். இந்த சமயங்களிலே தென் தமிழகத்திலே பெரும் எண்ணிக்கையிலிருந்த முக்குலத்தோர் சமூகத்தினர் காங்கிரசிலும் பின் திராவிட கட்சிகளிலும் கோலோச்சினர், ஆனால் வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தாலும் ரெட்டியார்,உடையார் (முதலியார்) சமுதாயத்தினர் கையில் தான் அரசியல் இருந்தது.

பெரும் எண்ணிக்கையிலிருந்தும் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றமின்றி இருந்த சமூகத்தை உயர்த்தும் நோக்கத்தில் திரு.இராமசாமி படையாட்சி அவர்கள் உழவர் உழைப்பாளர் கட்சி என ஆரம்பித்து தேர்தலிலே போட்டியிட்டனர், தென்னாற்காடு மாவட்டத்திலே 18ல் 17 தொகுதிகளிளை வென்றனர் யாருடைய கூட்டணியுமில்லாமல் அப்போது முதுபெரும் தலைவர் காமராசர் அவர்கள் காங்கிரஸ் தலைவர்.

அப்போதே வன்னிய சமூகம் மாற்றத்துக்கு தயாராக இருந்தது, சரியான வழிகாட்டுதலுக்காகவும், தலைவனுக்காகவும் ஏங்குவது புரிந்தது. அதன் பின் காமராசர் அவர்கள் இராமசாமி படையாட்சி அவர்களிடம் பேசி காங்கிரசில் சேரச்செய்தார், இராமசாமி அவர்களுக்கு மந்திரி பதவியும் அளித்தார், ஆனால் காங்கிரஸ் என்ற சமுத்திரத்திலே கலந்த சிறு ஓடையாகிவிட்டது.அதன் பின் திரு இராமசாமி படையாட்சியார் மீதிருந்த பேரன்பினாலும் பெரு மதிப்பினாலும் காங்கிரசை எதிர்த்து சமுதாய முன்னேற்றம் என யாரும் பேசவில்லை.

அவரது கால கட்டத்துக்கு பிறகு மீண்டும் அதே இழிநிலை. இந்த நிலையில் தான் 80 களின் தொடக்கத்திலே திரு ஏ.கே.நடராசன் என்பவரால் வன்னியர் சங்கம் மீண்டும் உத்வேகம் பிடித்தது. அப்போது திண்டிவனம் பொறுப்பாளராக இருந்தவர்தான் மருத்துவர் இராமதாசு, திரு ஏ.கே.நடராசன் அவர்கள் அரசு பணியிலிருந்ததால் அவரால் முழுமூச்சாக சமுதாயப்பணியிலே ஈடுபடமுடியவில்லை. அப்போது சமுதாயப்பணியாற்றிய போராளிதான் மருத்துவர் இராமதாசு, ஏதோ திடீரென ஒரு நாள் வன்னிய சமூகம் மந்தையாடு மாதிரி அவர் பின்னால் போகவில்லை. ஒரு நல்ல அற்பணிப்புள்ள தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருந்தபோது மருத்துவரின் போராட்டகுணம், அற்பணிப்பை கண்டு மனமுவந்து ஏற்றுக்கொண்டது வன்னிய சமூகம். மருத்துவர் இராமதாசு அவர்கள் அரசியல் சமூக வாழ்வில் எத்தனை கூட்டங்கள், எத்தனை கிராமங்களிலே சுற்றுப்பயனம் செய்தார், எத்தனை கல்லடிகள், எத்தனை தலைமறைவு இரவுகள் என்பது வெளி உலகுக்கு தெரியாது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, இதுவெல்லாம் தெரியாமல் ஏதோ அவர் திடீரென அதிட்(ஷ்)டத்தினால் தலைவரானது போல் எண்ணிக்கொண்டு பொறாமையால் அவரை தாக்குகின்றனர்.

இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம்,
1987 அது வன்னிய சமூகத்திற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு,
வன்னிய சமுதாயத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. இதுவரை தமிழகம் சந்திக்காத போராட்டத்தை வன்னிய சமுதாயத்தினால் சந்(சா)தித்தது. ஒருவார மறியல் போராட்டம், தமிழக தலைநகர் தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டம் முழுவதும் வாகனப்போக்குவரத்து இல்லை. இதில் நானும்தான் பாதிக்கப்பட்டேன் ஏழாவது படிக்கின்றபோது 4 கிலோமீட்டர்கள் நடந்து பள்ளிக்கு சென்றேன். அப்போது கூட எனக்கு கோபம் வரவில்லை என் சமூகத்துக்காக ஏதோ நடக்கிறது எனவே இந்த வலியை பொறுத்துக்கொள்ளவேண்டும் என தான் எண்ணினேன்.

நமது அதிகார அமைப்பு எப்போதுமே ஒரு பிரச்சினை பெரிதானப்பின் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவரை வீம்புக்காக சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ளும். ஒரு வார மறியல் போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன் கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். முக்கிய முதல் நிலை தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், இதனால் போராட்டம் பிசு பிசுக்கும் என அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தது. ஆனால் அன்றைய கட்டத்திலே முதல் நிலை தலைவர்களின் வழிகாட்டிதல் படி இரண்டாம் நிலைத்தலைவர்களால் நடத்தப்பட்டது. இரண்டாம் நிலைத்தலைவர்களை கைது செய்ய முனைந்தபோது பலர் தலைமறைவு. சாலை மறியலுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன, அதனால் இன்று வரை மரங்கள் வெட்டி வீசப்பட்டதை மரம்வெட்டி கும்பல் என நக்கல் அடிக்கப்பட்டு வரப்படுகின்றது, ஆனால் இந்த மரங்கள் யாருடைய மரங்கள்? அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும் அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே, மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால் அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம் அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும் ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம் சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம் தேடப்போகின்றன?)

முதல் இரண்டு நாட்களிலேயே போராட்டத்தின் போக்கு புரிந்துவிட்டது. பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பமில்லை, வன்னிய இனத்தோர் மீதும், வன்னிய கிராமங்களின் மீது மாபெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டது, அது இதுவரை யாராலும், ஏன் வன்னிய இனத்தோரால் கூட இந்த உலகிற்கு சொல்லப்படவில்லை துப்பாக்கி சூட்டில் பல வன்னியர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டு தியாகியாயினர் அப்போதும் கூட போராட்டம் கட்டுக்கு வரவில்லை.போராட்டத்தை கட்டுக்கு கொண்டுவர ஒரே வழி கலவரம் தான், அதுவரை தலித் மக்கள் போராட்டத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்,அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் இருந்தன.
அப்போதுதான் காவல்துறையால் தலித் மக்கள் தூண்டப்பட்டு நேரடிமோதல்கள் நடந்தன. எப்படி வன்னியர்களின் மறியல் போராட்டத்தை தலித் மக்களை தூண்டுவதன் மூலம் முறியடிக்க முயற்சி செய்தனர் என்பதைப்பற்றி விரிவாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி அவருடைய பணிக்கால சாதனைகள் பற்றி குமுதத்தில் தொடராக எழுதியதில் விவரித்துள்ளார். இதனால் வட மாவட்டங்களில் ஒரு பத்து ஆண்டுகள் சாதித்தீ எரிந்து இப்போது ஒரு எட்டு ஆண்டுகளாகத்தான் அமைதியாக உள்ளது.

ஆனால் எதுவுமே மறியல் போராட்டத்தை தோல்வியுறச்செய்யவில்லை. பின் அரசாங்கம் மிகப்பிற்பட்ட மற்றும் அட்டவணை பட்டியல் என ஒரு பிரிவை உருவாக்கி இட ஒதுக்கீடும் அளித்தது.

ஒரு சிறு இடைச்செருகல், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இன்று பலர் விமர்சிக்கின்றனர் தி.மு.க. ஆட்சி பீடம் ஏறவேண்டுமென இப்போராட்டம் நடத்தப்பட்டது என பலர் இன்று விமர்சிக்கின்றனர், ஆனால் 1987ல் நடந்த இப்போராட்டம் இராமதாசு அவர்களின் சுய நலத்துக்காக நடைபெற்றது என யாரும் விமர்சிக்கவில்லை, ஏன் அவரை கடுமையாக எதிர்க்கும் சில வன்னிய இனத்தலைவர்கள் கூட இந்த போராட்டத்தை விமர்சித்ததில்லை, ஏனெனில் இது வன்னிய சமுதாயத்துக்காக நடத்தப்பட்டது, தனி மனிதனுக்காகவோ (அ) அல்லது குறிப்பிட்ட மனிதர்களுக்காகவோ நடத்தப்பட்டது அல்ல.

 மருத்துவர் இராம தாசுவின் மீதான சொல்லடிகள் – ஒரு அலசல் – 2

பாமக 1989 ம் ஆண்டு மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்டது.

அவருக்கு தோளோடு தோள்நின்று இந்த கட்சியை உருவாக்கியவர்கள் பலர்,
இதில் தலித் சமுதாயத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை ஆகியோர் முக்கியமானவர்கள். பாமகவின் கொள்கைகள் சட்டதிட்டங்கள் எல்லாம் முன்னாள் நீதிபதி,முன்னாள் இ.ஆ.ப (IAS) அதிகாரிகள் மற்றும் பல கற்றறிந்த பெரியவர்களாள் உருவாக்கப்பட்டது.

பாமகவின் கொள்கைகள் என்ன?

கம்யூனிசத்தின் சிறந்த அம்சங்கள், சோஷலிசத்தின் முக்கிய அம்சங்கள், பெரியாரின் திராவிட கொள்கைகளில் சில, டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கொள்கைகள் என அனைத்து முக்கிய இசங்களிலிருந்தும் சிறந்தவைகள் கலந்த கலவைதான் பாமகவின் கொள்கை.

பாமக ஒரு வன்னியர் கட்சியா?

நிச்சயமாக இல்லை, பாமகவின் சட்டதிட்டங்களிலும் சரி கொள்கைகளிலும் சரி ஒரே ஒரு இடத்தில் கூட வன்னிய சமுதாயத்தின் பெயரோ வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை, அதன் தொடக்க காலத்தில் பல மேல்மட்ட தலைவர்கள் தலித்,நாடார்,முசுலீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், இன்றும் கூட பல வன்னியரல்லாதோர் பாமகவில் கட்சி பொறுப்பிலும், சட்டமன்ற,பாராளமன்ற உறுப்பினராகவும்,ஏன் மத்திய அமைச்சராகவும் கூட இருக்கின்றனரே, பிறகெப்படி இது வன்னியர் கட்சி என முத்திரை குத்தப்பட்டது, அங்கேதான் நமது தமிழ் பத்திரிக்கை ஊடகம் விளையாடிவிட்டது, இது பற்றி விரிவாக இன்னொரு பத்தியில் பார்ப்போம்.

பாமக கொடியிலே உள்ள நீல நிறம் தலித் சமுதாயத்தையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும், சிவப்பு கம்யூனிசத்தையும் குறிப்பவை.

பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம் அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.

பாமகவின் முதல் தேர்தல் களம்
1989 ம் ஆண்டு கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. தனித்தும் போட்டியிட்டது, தருமபுரி,திண்டிவனம்,சிதம்பரம் தொகுதிகளிலே இரண்டாம் இடம், அதுவும் தருமபுரியிலே 10,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி, கடலூரிலே 95,000 வாக்குகள், இன்னும் பல தொகுதிகளிலே ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முதல் தேர்தலிலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மாநில கட்சி என தேர்தல ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

பிற தேர்தல்கள்

1991 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -1,
இரண்டாமிடம் 12,
இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் – 21
பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் – 60
கூட்டணி – இல்லை
அலை – ராஜீவ் காந்தி படுகொலை

1996 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -4,
இரண்டாமிடம் 7,
இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் – 16
பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் – 35
கூட்டணி – இல்லை
அலை – ஜெயலலிதா எதிர்ப்பு

1998 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -4,
போட்டியிட்டது – 5
இரண்டாமிடம் 1,

கூட்டணி – அதிமுக,பாஜக,மதிமுக

அலை – இல்லை

1999 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -5,
போட்டியிட்டது – 8,
இரண்டாமிடம் – 3,
கூட்டணி – திமுக,பாஜக,மதிமுக
அலை – இல்லை

2001 சட்டமன்ற தேர்தல்

வெற்றி -22,
போட்டியிட்டது – 27,
இரண்டாமிடம் – 5,
கூட்டணி – அதிமுக,காங்கிரஸ்
அலை – இல்லை

2004 பாராளுமன்ற தேர்தல்

வெற்றி -6,
போட்டியிட்டது – 6,
இரண்டாமிடம் – 0,
கூட்டணி – திமுக,காங்கிரஸ்,மதிமுக
அலை – இல்லை

தேர்தல் பாதையை பார்க்கும் போது எந்த கூட்டணியில் பாமக இருக்கின்றதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.

இனி நேரடியாக விடயத்துக்கு வருவோம்

மருத்துவர் இராமதாசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி அலசுவோம்

தலித் விரோதம்
தலித் இனத்தின் மீது எப்போதும் மருத்துவர் விரோதம் காட்டியதில்லை, சில வன்னிய இனத்தை சேர்ந்தவர்கள் காட்டியிருக்கின்றனரே தவிர மருத்துவர் காட்டியதில்லை. பாமகவின் பொதுச்செயலாலர் பதவி தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என பாமகவிலே சட்டமே உண்டு

பாமக ஆட்சி கட்டில் ஏறினால் ஒரு தலித்தை முதல்வராக்குவதாக சபதம் செய்துள்ளது

முதன் முதலில் மத்திய அமைச்சர் அதுவும் ஒரே ஒரு பதவி பாமகவிற்கு கிடைத்த போது அது கொடுக்கப்பட்டது வன்னியருக்கல்ல தலித்.இரா.எழில்மலைக்கு, அதன் பின் டாக்டர்.பொன்னுசாமி அமைச்சராக இருந்தார்.

தமிழ்குடிதாங்கி என்ற பெயர் புரட்சிகலைஞர்,சூப்பர்ஸ்டார்,இளையதளபதி போல் தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயரல்ல,குடிதாங்கி என்ற ஊரிலே தன் சொந்த சாதி மக்களை எதிர்த்து தலித் இனத்திற்காக போராடியதால் திருமாவளவன் என்ற தலித்தலைவரால் சூட்டப்பட்டப்பெயர்தான்.

1987லே வன்னியர்களின் போராட்டத்தை தடுக்க சாதித்தீ கொளுத்திவிடப்பட்டு எச்சங்களும் மிச்சங்களுமாக அமைதியை குலைத்த நாட்களிலே தலித் சமுதாயத்திலும் வன்னிய சமுதாயத்திலும் மாறி மாறி படுகொலைகள் நடந்தேறின. அப்படி ஒரு சில தலித்களால் படுகொலைசெய்யப்பட்டவரின் இறுதிச்சடங்களிலே நான் கலந்து கொண்டபோது மருத்துவர் இராமதாசு துக்கம் விசாரிக்க வருவதாக தகவல் வந்தது, அப்போது அங்கு கூடியிருந்த பலர் ஆமா இவரு வந்து என்ன சொல்லுவாரு பொறுமையாயிருங்க பேசித்தீர்க்கலாம்னு தான் சொல்வாரு, வேற என்ன சொல்வாரு என்பதிலிருந்தே தலித் சமுதாயத்தோடு மோதல் போக்கை அவர் விரும்பவில்லை.

வடதமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயங்கள் அரசியலில் ஒன்று சேர்ந்தால் வேறு எந்த கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத நிலை, இரண்டு அடித்தட்டு சமுதாயங்களின் ஒற்றுமை மற்று அரசியல் எழுச்சிக்காக கணக்கிட்டு அரசியல் நடத்தி வருகின்றார்

தலித் இனத்தவருக்கு வட தமிழ்நாட்டிலே சரியான தலைவர் இல்லாதபோது மதுரையிலிருந்த திருமாவளவனை வட மாவட்ட மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே மருத்துவர்தான்.

கொள்கையற்ற கூட்டணித்தாவல்

முதலிலேயே ஒரு கேள்வி திமுக , அதிமுக வோடு மாறி மாறி கூட்டணி வைத்துகொள்கிறார் என்று குற்றம் சாட்டுபவர் எவரும் ஏன் திமுகவும் அதிமுகவும் கூட்டணியில் சேர்த்துக்கொள்கின்றன, ஏன் திமுக,அதிமுகவை கொள்கையற்ற கூட்டணி என தாக்குவதில்லை, அதுவும் மருத்துவர் இராமதாசை தாக்கும் அளவுக்கு தாக்குவதில்லை

ஏன் கொள்கை கொள்கையென பேசியபோது கொள்கை பிடிப்போடு இருந்தபோது இந்த பத்திரிக்கைகளும் இன்று அவர்மீது மட்டையடிப்பவர்களும் பாராட்டினர்களா? இல்லையே எழுத்தாளர்களிலே ஞானியையும் பத்திரிக்கைகளிலே நக்கீரனைத்தவிர மற்ற அனைவரும் இடித்துரைப்பதேயேதான் தொழிலாக வைத்துள்ளனர்.

1996 தேர்தலுக்குமுன் செல்வி.ஜெயலலிதா ஆட்சியின்போது 7 கட்சி கூட்டனியை உருவாக்கி அதன் சார்பாக திண்டிவனத்திலே மாநாடும் போட்டு அப்போது அடுத்த முதல்வர் கருணாநிதி தான் என உரக்க கூறியவர் மருத்துவர், ஆனால் அந்த சமயத்திலே கூட்டணியிலிருந்து துரத்தப்பட்டார்.

அப்போதும் தனியாக நின்று 4 தொகுதிகளிலே வென்றனர், ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என உதயசூரியனுக்கு ஓட்டே போடாதா வன்னிய இனப்பெண்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்தனர். இது பாமக வை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது மாநிலகட்சி என்கின்ற தகுதி இழப்பும் யானைசின்ன இழப்பும் நடந்தது.

1998 நாடாளுமன்ற தேர்தல், திமுக,அதிமுக இரண்டோடும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம், ஆனாலும் திமுகவோடு கூட்டணி காண விரும்புகிறோம். மாநில கட்சி தகுதி பெற குறைந்தது 2 பாராளுமன்ற தொகுதியிலே வெற்றி பெற வேண்டும், ஆணால் திமுகவோ ஒரே ஒரு தொகுதி மட்டுமே தரமுடியும் என கேவலப்ப்டுத்தியது. இங்கே தான் கருணாநிதியன் ராசதந்திரம் எம்.ஜி.ஆர் க்கு அடுத்தப்டியாக இராமதாசுவிடமும் அடிவாங்கியது.

இதே போல் மீண்டும் 2001 சட்டசபைதேர்தலிலே பாமக வை கழற்றிவிட்டு திமுக தோற்றது, அந்த பாடங்கள் தான் இப்போது கூட்டணியை சிதறவிடாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.

கூட்டணி மாற்றத்திற்காக கொள்கை அளவில் எதையும் பாமக விட்டுத்தரவில்லை, பிற்படுத்தப்பட்ட சமுதாய முன்னேற்றத்தை விட்டுத்தந்தனரா? தமிழ் மொழி,சமுதாய வளர்ச்சியை விட்டுதந்தனரா?

பாமகவை தாக்குபவர்கள் திமுக,அதிமுக,பாஜக,காங். எல்லாம் எக்காலத்திலும் ஒரே கூட்டணியில் இருப்பதாக எண்ணுகின்றனரோ?

அடுத்தபதிவில் வாரிசு அரசியல், திரைப்படங்கள் மீதான தாக்குதல், ரஜினி விஜயகாந்த் விவகாரம் மற்றும் பதிவின் தலைப்பை பற்றிய கருத்தை பார்ப்போம்

அடுத்த பகுதிக்கான சுட்டி இங்கே

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல்- 3

இடைக்குறிப்பு
இந்த பதிவுகள் இராமதாசுக்கு புனிதர் பட்டம் கட்டவோ
அல்லது அவர் செய்வது செய்தது எல்லாம் சரியென
வக்காலத்து வாங்கவோ எழுதப்படுவது இல்லை.
வேறு எந்த அரசியல் தலைவர் மீதும் நடத்தப்படாத
திட்டமிட்ட ஒரு ஊடக வன்முறை பாமகவின் மீதும்
இராமதாசுவின் மீதும் நடத்தப்படுகிறது
அது ஏன் என்பதற்காகத்தான் இந்த அலசல்

வாரிசு அரசியல்
மருத்துவர் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு
மகனை மத்திய அமைச்சராக்கியது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறும் முன் சற்று கடந்த கால
நிகழ்வுகளையும் நினைவு படுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆர்,அன்பழகன்,நெடுஞ்செழியன் இன்னும்
பல மக்கள் செல்வாக்கு படைத்த அடுத்தநிலை
தலைவர்கள் இருக்கும் போதே மு.க.முத்து என்ற
தனது மகனை அரசியல் வாரிசாக புகுத்தினார்
திரு.கருணாநிதி, அதனால் திமுக வே பிளவுபட்டது
அதன் பிறகு வைகோ என்ற மக்கள்,தொண்டர்கள்
செல்வாக்கு பெற்ற அடுத்த கட்ட தலைவர் இருக்கும் போது
மு.க.ஸ்டாலின் என்ற அடுத்த மகனை வாரிசாக்கினார்
அதனால் மீண்டும் ஒருமுறை பிளவுபட்டது அந்த இயக்கம்,
எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறிய போது
ஒரு மாவட்ட செயளாளர் கூட அவருடம் செல்லவில்லை,
ஆனால் வைகோ வெளியேறியபோது 8 மாவட்டசெயலாளர்கள்
அவருடன் வேளியேறினர் இதிலிருந்தே வைகோ அடுத்த தலைவர் பதவிக்கு மனதளவில்
தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார் என புரிகிறது.

ஆனால் இப்படிபட்ட அடுத்தகட்ட தலைவர்கள் பாமகவில் இல்லை. அரசியல் வாரிசை அடையாளம் காட்டாமல் போனால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த இயக்கம் பிளவுபட்டு அழிந்துவிடும் (அதை தான் பாமகவிலும் நடக்க வேண்டும் என பலர் கனவுகான்கின்றனர்)

எப்படிப்பட்ட நிலையில் அன்புமணி அரசியலுக்கு வந்தார்?

மருத்துவர் இராமதாசின் முதுகைப்பார்த்தால் அதில் எதிரிகளால் வாங்கிய குத்துக்களைவிட சொந்த கட்சியின் தலைவர்களால் வாங்கிய குத்துகளே அதிகம்.

1995 என எண்ணுகிறேன் பண்ருட்டி இராமச்சந்திரனையும் தனக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார், மருத்துவர் இருக்கும்போதே பாமகவை கைப்பற்ற என்னி
1995லே பாமாகவை பிளந்தார், அது மருத்துவரின் முதுகிலே சொந்த கட்சிகாரரால் வாங்கிய முதல் குத்து 1998 வரை பாமகவில் இராமதாசுவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் பேராசிரியர் தீரன்.(இவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை, இவருக்கென்று அல்ல பாமகவில் எல்லாமே மருத்துவர்தான் அவர்பின்தான் வன்னிய இனம் வேறு யார் பின்னும் இல்லை), அடுத்த அரசியல் வாரிசாக மருத்துவரால் அடையாளம் காட்டப்பட்டவர்.

பேராசிரியர் தீரனுக்காக பல செயல் தளபதிகளை இழந்தார் மருத்துவர், அதிமுக விற்கு ஒரு ஆண்டிப்பட்டி தொகுதி மாதிரி, பாமகவிற்கு ஒரு ஆண்டிமடம் தொகுதி, 1991 தேர்தலிலே ராஜீவ் படுகொலை அலையிலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் தோல்வியடைந்தது பாமக. அந்த தொகுதியை பாமகவின் கோட்டையாக மாற்றியது ஞானமூர்த்தி என்ற பிரமுகர், அவருடைய உழைப்பாலும்,பெரும்பான்மையாக இருந்த வன்னியமக்களாலும் ஆண்டிமடம் பாமகவின் நிச்சய வெற்றி தொகுதி.

எந்த கூட்டணியும் இல்லாமல் 1996 தேர்தலை சந்தித்தபோது பேராசிரியர் தீரன் வெற்றிபெறவேண்டும் என தொண்டர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையில் திரு.ஞானமூர்த்தியை குறிஞ்சிப்பாடி தொகுதிக்குமாற்றிவிட்டு திரு.தீரன் அவர்களை ஆண்டிமடத்திலே போட்டியிடச்செய்து சட்டமன்ற உறுப்பினராக்கினார், இதனால் ஞானமூர்த்தி என்கிற செயல் தளபதியை இழந்தார், இன்றும் தன் சொந்த செல்வாக்கினால் ஆண்டிமடத்திலே ஒரு முக்கிய அரசியல் புள்ளியக உள்ளார் திரு.ஞானமூர்த்தி.

1998ம் ஆண்டு தேர்தலிலே அதிமுக வோடு கூட்டணி வைப்பதை எதிர்த்து கட்சியை உடைத்தார் பேராசிரியர் தீரன். அது வெளியே சொல்லப்பட்ட காரணம், உண்மையான காரணகர்த்தா அப்போது முதல்வராயிருந்தவர், கைமாறிய பணம்(பணம் பற்றி சொல்வழிக்கேள்வி,பத்திரிக்கை செய்திகள் மட்டுமே, ஆதாரம் இல்லை எம்மிடம்) . பேராசிரியர் தீரனால் மருத்துவரின் முதுகில் இரண்டாவது குத்து.

அதன்பின் தலித்.இரா.எழில்மலை. முதல்முறையாக மத்திய அமைச்சர் பதவி கிடைத்தபோது இவருக்குத்தான் வழங்கப்பட்டது, தீரனுக்குப்பின் இவர்தான் மருத்துவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்,இவர் பாமகவின் சர்பாக அமைச்சரானவர், ஆனால் வேறுவிதமாக செயல்பட்டார் (இதைப்பற்றி இன்னும் விரிவாக சொல்லவிரும்பவில்லை) இவருக்கு 1999 தேர்தலிலே போட்டியிட அனுமதிக்கப்படவில்லை, தலைமைக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு, அதனால் என்ன அமைச்சராக்கிய கட்சியை விட்டு ஓடவேண்டுமா என்ன? ஆனால் அதிமுகவிற்கு ஓட்டமெடுத்தார். இது மூன்றாவதாக முதுகில் விழுந்த குத்து.

திரு.முருகவேல் தென் மாவட்டத்திலே செயல்திறன் மிக்க ஒரு தலித் தலைவர்,2001 தேர்தலிலே அவரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்க வேண்டுமென பலமில்லாத தென் மாவட்டத்திலிருந்து அவரை வடமாவட்டத்திலுள்ள வந்தவாசி தொகுதியிலே நிறுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். சிவகாமி என்ற மற்றொரு ச.ம.உ. இவரும் வன்னிய சமுதாயத்தவர் அல்ல ஆனால் இவரும் கட்சியை விட்டு விலகி அதிமுகவிலே சேர்ந்துவிட்டார்,இப்போதும் பாமகவினால் கிடைத்த ச.ம.உ. பதவியை உதறாமல்.

எத்தனை எத்தனை குத்துகள் முதுகிலே… அடுத்த தலைவராக அடையாளம் காட்டியபோதும் மருத்துவர் இராமதாசு இருக்கும் போதே கட்சியை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென அத்தனை பேரும் நினைத்தது வேதனை. திரு.பண்ருட்டியார், திரு.தீரன், திரு.தலித்.இரா.எழில்மலைக்கு பிறகு கட்சியில் அனைவருக்கும் அறிமுகமானவர் யாரும் இல்லை. மிகப்பெரிய வெற்றிடம், யாரை வாரிசாக்குவது?

இப்பொழுது திரு.வீரபாண்டி ஆறுமுகத்தையோ, திரு.ஆற்காடு வீராசாமியையோ, திரு.கோ.சி.மணியையோ அல்லது திரு.பொன்முடியை யோ திமுகவின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டினால் எத்தனை திமுகவினர் ஏற்றுக்கொள்வர், இதுவே வைகோ அடையாளம் காட்டப்பட்டிருந்தால் நிச்சயம் பிரச்சினை இல்லை, வைகோபோல் செல்வாக்குபெற்ற அடுத்த நிலை தலைவர் இல்லை, யாரையேனும் அரசியல்வாரிசாக காட்டினால் கட்சியில் வீண்குழப்பம். தாமாக விலே மூப்பனாருக்குப்பின் பீட்டர் அல்போன்சோ, சோபா வோ, ஜெயந்தி நடராசனோ தலைவராயிருந்தால் அடுத்தவர்கள் விட்டிருப்பார்களா? கட்சியே இல்லாமல் போயிருக்கும் அதே சமயம் அரசியல் வாரிசை அடையாளம் காட்டவில்லையென்றால் அந்த தலைவனுக்கு பிறகு அந்த கட்சி சிதறிவிடும், பலரின் துரோகத்திற்குப்பின் இராமதாசு எடுத்த முடிவுதான் அன்புமணியின் அரசியல் அடையாளம் இதற்கு பாமகவின் 2ம் நிலைத்தலைவர்கள் ஆதரவும் உண்டு, அது சரி இதை எப்படி வன்னிய இனம் ஏற்றுக்கொண்டது, அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.

இது நன்றாகவே புரிந்தும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு பாமக அழியாத என ஏங்கிக்கொண்டுள்ளனர் பத்திரிக்கைகளும் இன்னும் பலரும், முகவை,ஜெஜெவை, மூப்பனாரை,காங்கிரசை, பாஜக வை எல்லாம் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும் போது மென்மையாகவும், பாமகவின் அரசியல் வாரிசுப்பிரச்சினையை விமர்சிக்கும்போது கடுமையும் காட்டுவது பாமக இதனாலாவது பலம் இழக்காதா என்றுதான்

பாமகவின் மீது பூசப்பட்ட வன்முறை பெயரை அழிக்கத்தான் பாராளுமன்றத்துக்கு படித்தவாராக, செயல், நிர்வாகத்திறன் மிக்கவர்களாக நிறுத்துகின்றனர், கட்சிக்காக உழைத்தவர்களை சட்டமன்றத்தேர்தலில் நிறுத்துகின்றனர் இது மருத்துவரின் முடிவு.
பாண்டி உறுப்பினர் பேராசிரியர் ராமதாசு, திண்டிவனம் உறுப்பினர் தன்ராஜ் ஒரு பேராசிரியர், சிதம்பரத்திலிருந்து டாக்டர்.பொன்னுசாமி, வேலு முன்னாள் இ.ஆ.ப. இது அத்தனை யும் பாமகவின் இமேஜை உயர்த்துவதற்குத்தான்.

ஏ.கே.மூர்த்தி மருத்துவரின் பாதுகாப்பு படையிலிருந்த பாமகவின் அடிமட்டத்தொண்டர், அவர் அமைச்சராகவில்லையா? எந்தவித அரசியல் பின்புலனோ, மருத்துவரின் சொந்தக்காரரோ இல்லத தி.வேல்முருகன் பன்ருட்டி சட்டமன்ற உறுப்பினராகவோ இல்லையா? இப்படி இன்னும் பலர் உள்ளனர், எனவே மருத்துவரின் சொந்தங்களுக்கு தான் பாமக என்று புலம்புவதை எங்களை மாற்றாது ஏனைன்றால் பாமகவை நாங்கள் பத்திரிகை வாயிலாக அறிவதில்லை, உள்ளிருந்து அறிகின்றோம்.

எதற்கெடுத்தாலும் அன்புமணி தேர்தலில் நிற்காமல் மந்திரியாகிவிட்டார் என புலம்புபவர்கள் சற்று சிந்தியுங்கள் முகம் தெரியாத வேலு, தங்கராஜ் ஆகியோரெல்லாம் பாமகவின் சார்பிலே நிறுத்தப்பட்டு வெற்றி பெரும்போது அடுத்த வாரிசாக அடையாளம் காட்டப்பட்டு, இராமதாசுக்கு அடுத்தபடியாக கட்சியிலே செல்வாக்காக இருக்கும் அன்புமணிக்கா தேர்தலிலே வெற்றிபெறுவது சிரமம். அன்புமணிக்கு என்றால் மேல்சபை சீட்டு தருகிறோம் மற்றவர்க்கெல்லாம் தரமுடியாது என திமுக சொன்னது, அது மட்டுமில்லாமல் அன்புமணி தேர்தலிலே நின்றால் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்வது யார்? மருத்துவருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த முகம் அன்புமணிதான்.

அன்புமணியின் அரசியல் பிரவேசத்தை வைத்து ஒரு பிரச்சினை உருவாகி அதனால் பாமக என்ற அரசியல் கட்சி சிதறி அதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரசியல் வலிமையை, அரசியல் அங்கீகாரத்தை இழக்கத்தயாராக இல்லை வன்னிய இனம்.

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் – 4

இதுவரை இந்த தலைப்பில் இதற்கு முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் – ஒரு அலசல் – 1

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் – ஒரு அலசல் – 2

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் – ஒரு அலசல் – 3

நடிகர்களின் மீதான விமர்சனங்கள்
மற்ற சி(ப)ல அரசியல்வாதிகளைப்போல் குளிரூட்டப்பட்ட அறையிலே அமர்ந்து கொண்டு, பெரிய பணக்காரர்களோடும், தொழிலதிபர்கள், பண்ணையாளர்களின் ஆதரவோடும் அரசியல் செய்பவரல்ல மருத்துவர். செல்போனை தட்டினால் தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொண்டு வந்து கொட்டப்படும் நிலையும் இல்லை, நீரிழிவு மற்றும் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய அளவிலும் கிராமங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருபவர்தான் மருத்துவர்.

அப்படி சுற்றுப்பயணங்கள் சென்றபோது தமிழர்கள் முக்கியமாக இன்றைய இளைஞர்கள் திரைப்படம் என்ற மாயையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது, ஒரே ஒரு படிப்பகம் கூட இல்லாத குக்கிராமங்களில் கூட அரிதாரம் பூசும் பல நடிகர்களுக்கு ஆரத்தி எடுக்க ரசிகர்மன்றங்கள் இருந்தன, ஒவ்வொரு ஊரிலும் ரஜினி,விஜயகாந்த,கமல்,அஜீத்,விஜய் தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர் மன்றங்கள் என குறைந்த பட்சம் 7 ரசிகர்மன்றங்கள் இருக்கும், அருண்குமார் மற்றும் இன்னும் பல நடிகர்களின் மன்றங்களை கணக்கில் சேர்க்கவில்லை.
இளைஞர்களின் வாழ்க்கை,பலம் இப்படி வீணாவதை எண்ணித்தான் திரைப்படங்களின் பெயரால் நடிகர்கள் நிசத்தில் போடும் வேடங்களை கலைக்க குரல் கொடுத்தார், அது மாதிரியே திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதாவே தொடப்பயந்த ரஜினி என்ற மாயையை உடைத்து அவரின் உண்மை பலத்தை நாட்டுக்கும் புரியவைத்தார்.

ரஜினிகாந்த் பற்றிய சுந்தரமூர்த்தியின் பதிவையும், விஜயகாந்த் பற்றிய எனது பதிவையும் கீழ்கண்ட சுட்டிகளில் படியுங்கள்

நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்

விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?

இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்

இந்த மூன்று பதிவுகளும் இவர்களின் முகமூடியை கிழித்தெரியும்…

இதற்குமேல் இந்த இருவரைப்பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை

மற்ற எந்த ஊடகத்தையும் விட திரைப்பட ஊடகம் அதிக வலிமை வாய்ந்தது, குழந்தைகளைக்கூட பாதிக்ககூடிய ஊடகம், அப்படிபோடு போடு பாடலை முழுவதுமாக பாடிக்காட்டும் குழந்தையையும், சித்தப்பா விஜய் அங்கிள் சவால் சொல்றாரு என 3 வயது குழந்தையும் கூறும் பொழுது இந்த திரைப்படங்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என புரியவில்லையா? அந்த திரைப்படத்திலே சமூக பொறுப்போடும் தமிழ்ப்பற்றோடும் எடுங்கள் என கூறுவதில் என்ன தவறு?

கச்சத்தீவை ஏதேதோ காரணம் கூறி இலங்கையிடம் தாரைவார்த்தது இந்தியா, அதனால் இன்றும் மீனவர்கள் படும் துயரங்கள் எத்தனை எத்தனை, அந்த கச்சத்தீவை மீட்கப்போராடி கைதானவர்தான் மருத்துவர், ஈழத்தைப்பற்றி பேசினாலே ஏதோ தேசத்துரோக குற்றம் செய்தது போல விமர்சிக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் இன்றுவரை ஈழப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளிப்பவர், புலிகளை ஆதரித்து பேசியதற்காக பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டபோதும் கூட, புலித்தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டுவரவேண்டும் என தீர்மானம் சட்டசபையிலே கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க திமுக கூட பயந்து பின் வாங்கி நடுநிலை எனக்கூறியது, அப்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து தீர்மானத்தை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கான தார்மீக ஆதரவை தெரிவித்தனர், தமிழ் பெயரைச்சொல்லி யாரும் தமிழகத்திலே அரசியல் செய்யமுடியாது, தமிழ்ப்பெயரைச்சொல்லி யாராலும் ஒரு வாக்குகூட கூடுதலாகப்பெறமுடியாது, அந்த காலம் மலையேறிவிட்டது, மருத்துவரின் போராட்டம் தமிழின்,தமிழினத்தின் மீதான பற்றுதலாலொழிய அரசியலால் அல்ல, ஆனால் அவரது தமிழ் போராட்டங்களை கொச்சை படுத்திக்கொண்டுள்ளனர் பலர், இதில் பலருக்கு கர்னாடகவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வருபவர்கள் தமிழர்களை இரட்சிக்கப்போவதாக கனவு வேறு.

மருத்துவர் இராமதாசு மற்ற அரசியல்வாதிகளைப்போல அன்போடு ஆரத்தழுவுவதுபோல முதுகிலே கத்தியை இறக்குபவர் அல்லர், அடுக்கு மொழியிலே அழகுத்தமிழிலே நயமாக பேசும் அரசியல்வாதியல்ல, கேமராவின் முன்னால் மட்டுமல்லாமல் எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் நடிக்கும் மனிதர்களுக்கிடையில் மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லும் குணம் படைத்தவர், ஆதரித்தால் பலமாக ஆதரிப்பதும் எதிர்த்தால் பலமாக எதிர்ப்பதும் இவரது இயல்பு, நாளை இவரோடு கூட்டணி வைத்தால் என்ன செய்வது, இவரை ஆதரித்தால் என்ன செய்வது என எண்ணி பசப்பு மொழிகள் பேசி கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுபவர் அல்ல, இவருடைய பேச்சும்,செயல்களும் அதிரடியாக இருக்கும், இதுதான் இவருடைய மிகப்பெரிய பலம், மிகப்பெரிய பலவீனமும் கூட, இவருடைய இந்த அதிரடிப்பேச்சினால் தான் செல்வி.ஜெயலலிதாவும், திரு.கருணாநிதியும் மோதிப்பார்க்க பயந்த ரஜினியுடன் மோதி ரஜினிக்கு இருந்த மாய பலத்தினை உடைத்தெறிந்தவர், இது தமிழினம் மறுமொரு நடிகரால், வேற்று மாநிலத்தவரால் ஆளப்படாமல் தப்பித்தது, இது மருத்துவர் இராமதாசினால் அடைந்த மிகப்பெரிய பலன். அதிமுகவோடு கூட்டணியைப்பற்றி மருத்துவர் கூறிய கருத்துகள் எமக்கு மிக அதிர்ச்சியை தந்தன.இந்த பேச்சுதான் அவருடைய பலவீனம், ஒரு தேர்ந்த அரசியல்வதிக்கான அரசியல் தந்திரம் (நயவஞ்சகம்?) அவரிடமில்லை, மனதில் பட்டதை நேரம் காலம் தெரியாமல் பேசுவது அவருடைய பலவீனம்.

முக்கியமான கேள்விக்கு வருவோம்,

ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன….?
பத்தாம் வகுப்பு(மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே, இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும், இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி… இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப்போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.. இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.

இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன…. வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன…. ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்…

ஆனால் சிறிது சிறிதாக இந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது, எப்போதும் பா.ம.கவையும் மருத்துவரையும் கடுமையாக தாக்கிக்கொண்டுவந்த குமுதமும் விகடனும் தற்போது கண்மூடித்தனமான போக்கை சிறிது மட்டுப்படுத்தியுள்ளன… ஆனால் தினமலர் இன்னும் கண்மூடித்தனமான தாக்குதலை பாமகவின் மீது தொடர்கின்றன…

மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை…. பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது…

பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம்
எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை….

ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்

1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும்
கடும் வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது…

குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை… இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது…

எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றோம்…

பொதுவாக சொல்லப்போனால் பா.ம.கவின் மீதும் இராமதாசுவின் மீதுமான மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போல விமர்சிக்காமல் கண்மூடித்தனமாக மிகக்கடுமையான விமர்சனம் செய்வதற்கு காரணம் பொறாமை, இயலாமை, அறியாமை ஆகிய மூன்று ஆமைகள் தான்….

 

உதிரம் சிந்தி
உயிர் கொடுத்து
பெற்றதிந்த
பாதுகாப்பு

 

சொந்த நாட்டிலும்
சொந்த ஊரிலும்
சூறாவளியில்
மாட்டிய
வைக்கோல் போராய்
சுற்றி சுற்றி
அடிக்கப்பட்டபோது
சுதந்திரமும் இல்லை
இங்கே
மனித உரிமையும்
மாய்ந்து விட்டன
இங்கே
வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்

இன்று
வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்

அன்று
பதறித்துடித்தபோது
பதுங்கிவிட்டன

பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு

பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு

எப்போதடா வாய்ப்பு
கிடைக்கும்
வாய்ப்பூட்ட போடலாம்
என காத்திருக்கும்
கழுகுகளே
உம் வாயில் மொத்தமும்
மண் தான்…

பார்வைகள் மாறுகின்றன…
பார்ப்பவர்களும் மாறுகின்றனர்…

காலங்கள் மாறுகின்றன…
காட்சிகளும் மாறுகின்றன…

பார்வைகள் மாறி
பாராளும் காலம்
போய்…
பாராளும் காலத்தில்
பார்வைகள் மாறுகின்றன…

ஒரே இரவில்
உயர்வு தேட
நாங்கள் ஒன்றும்
அது… அல்ல

ஒரே இரவில்
காட்சி மாற
இது ஒன்றும்
கனவு தொழிற்சாலை
அல்ல

காலங்கள் மாறுகின்றன…
காட்சிகளும் மாறுகின்றன…

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்

அதுவரை வரும்
தீய்ந்த
வாசனைகளுக்கு
பதில் தர
அலுத்துப்போய்…

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்

உயிர் ஈந்து எங்களை வாழ வைத்த தியாகிகளின் பாதம் தொட்டு இந்த பதிவுகளை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்…

 

 

 

ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்.. ஆர்.எம்.வீரப்பனை முன் நிறுத்தப் போகிறார் என்று ஒரு பரபரப்பு எழுந்த நேரம் அது. ஆர்.எம். வீரப்பன் தான் அப்போது மாபெரும் அரசியல் ஹீரோ. அப்போது அவரின் வீட்டின் முன் நிருபர்கள் தவம் கிடப்போம்.

எங்களிடையே இரு பெரியவர்களும் வந்து கலந்து நிற்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு நெருக்கமானார்கள்.

வீரப்பனை யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை.

அந்த இரு பெரியவர்களும் நம் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார்.

எக்ஸ்ட்ரா ‘வரும்படி’ இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான்.

இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை.

இன்னொரு கொடுமையும் உண்டு.

உளவுப் பிரிவின் மூத்த அதிகாரிகளிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் இன்னும் கொடுமையானவை.

பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான்.

இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு.

இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள்.

இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம்.

இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.

இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான்.

இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்… இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை.

நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்?

ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்…

ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள்.

நம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். (உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும் என்ற தலைப்பே கூட எனக்கு மிகுந்த வருத்தம் தருவதே, விஷயத்தை நேரடியாக சொல்ல எனக்கு வேறு ஏதும் தோன்றவில்லை)

என்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.

நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம்.

நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு.

மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு.

வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.

முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி.

தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சில உளவுப் பிரிவினரோடு பேசுகையில், அவர்கள் இந்த ஏஜென்சியை வரவேற்பதை உணர முடிந்தது. அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சில தகவல்களைத் தந்தனர். அவர்கள் சொன்னது இது தான்:

இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை.

இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும்.

இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும்.

இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும்.

ரா, ஐபியில் இந்தப் பயிற்சிகள் எல்லாம் தரப்படுவது தான். ஆனால், அவர்களுக்கு போதிய ஆள் பலம் இல்லை. (எதி்ர்க் கட்சியினரை உளவு பார்க்கவே இவர்களது எண்ணிக்கை நமக்குப் போதாதே)

இதனால் ஐபிக்கு போதிய ஆள் பலத்தைத் தருவதும் தீவிரவாதத்தை எதிர்க்க சீரியஸான ஒரு ஏஜென்சியை உருவாக்குவதும் தான் இந்த நவீன யுக தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி என்றனர் அந்த உளவுப் பிரிவினர்.

அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும்.

இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும்.

மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது.

ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும்.

ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்.. பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் ‘கிராண்ட் பிளானே’ இது தான் என்கிறார்கள் உளவுப் பிரிவினர்.

இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.

 (கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

  

என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்?


சமீப ஆண்டுகளாக இந்திய மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் பெறுகிற அளவுக்கு மிஞ்சிய ஊதியம் பல பேரது வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தது என்னவோ உண்மைதான். இப்போது அவர்களுக்கு வேலை பறி போவதாக அங்கொன்றும் இங்கொன்றுமென தினசரிகளில் காணக் கிடைக்கும் செய்திகள் அந்த வயிற்றில் எல்லாம் பால் வார்த்திருக்கிறது. முக்குக்கு முக்கு சிலாகித்துப் பேசுகிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பல ‘வெள்ளை காலர்’ ஊழியர்களின் வேலைக்கு உலை வைத்திருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களை நம்பியிருக்கும் இந்திய மென்பொருள் நிறுவனங்களும் இந்தப் பாதிப்பை உணராமல் இல்லை. அதனால் வேலைகள் காலியாவதும் உண்மையே. அதன் காரணிகளையும், விளைவுகளையும் அலசும் முன்னர் …..

இந்தியாவின் வேலையின்மை 2007 கணிப்பின் அடிப்படையில் 7.2 விழுக்காடு. அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்ற கேள்வியும், அதன் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமும் ஒரு பக்கம் ஏற்படுகிறது. இருந்தாலும் 7.2 விழுக்காடு என்று நம்புகிறோம். அமெரிக்காவில் 2008 செப்டம்பர் மாதம் 6.1 சதவீதம் பேருக்கு வேலை இருக்கவில்லை. அக்டோபரில் இன்னும் ஓரிரு விழுக்காடு கூடியிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் தனக்கு வேலை போகாமல் மற்றவர்களுக்கு வேலை போகும் போதுதான் வேலையின்மைக்கு 6, 7, 10 சதவீதக் கணக்கெல்லாம். ஒரு வேளை தனக்கே வேலை பறி போனால் வேலையின்மை 100 சதவீதம். படித்து விட்டு வேலை தேடி அலையும் போது நாட்டின் முதன்மையான பிரச்சினையாக இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் வேலை கிடைத்த பிறகு ‘மக்களுக்கெல்லாம் போதுமான திறமை இல்லை’ என்ற நிலைப்பாடாக உருமாறுவதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

மற்றத் துறைகளில் பணியாற்றும் திறமைசாலிகள் எவ்வளவு உழைத்தாலும் ஈட்ட முடியாத ஊதியத்தை, கல்லூரி முடித்துவிட்டு வெளியே வரும் சின்னப் பசங்க கழுத்தில் ஐ.டி கார்டைத் தொங்க விட்டபடியே சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தூக்கிக் கொடுத்தன. ஆனால் இந்த ஊதியத்தை இந்தியாவில் மற்ற வேலைகளில் உள்ளோர் வாங்கும் சம்பளத்தோடு ஒப்பிடுவது ஒரு வகையில் தவறுதான்.

மேலை நாடுகளில் உள்ள பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில். உதாரணமாக கார் தயாரிப்பு, வங்கித் தொழில், இன்சூரன்ஸ், மதுபான உற்பத்தி, ஏர்லைன்ஸ் இப்படி ஏதாவது ஒரு தொழில். இவற்றின் வரவு செலவுகளைப் பேணவும், நிர்வாகத்தைத் தங்குதடையின்றி நடத்தவும் அவை சார்ந்த தகவல் அனைத்தையும் கணினியில் உட்செலுத்தி அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவது அவசியம். அதற்குத் தக்கபடி கணிப்பொறி மென்பொருட்களை உருவாக்க வேண்டிய தேவை அந்தக் கம்பெனிகளுக்கு இருந்தது; இருக்கிறது. அந்த வேலையை அந்த மேலை நாடுகளில் செய்வதற்கு மென்பொருள் ‘வல்லுனர்கள்’ மணிக்கு இத்தனை டாலர் என்று பில் எழுதினார்கள்.

தமக்கு மென்பொருள் வேலை செய்ய வரும் இந்த ‘வல்லுனர்’ சமூகத்திற்கு ஒரு நிறுவனம் மணிக்கு சுமார் 70 டாலர் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் நம்ம ஊரு சாஃப்ட்வேர் நிறுவனங்கள், “எங்களுக்கு மணிக்கு 40 டாலர் கொடுங்கள் போதும். நாங்கள் இந்தியாவில் இருந்து அதே பணியைச் செய்து தருகிறோம்” என்று சொல்லி ஒப்பந்தத்தை வென்றெடுத்து இந்தியாவில் ஏராளமான இளைஞர்களை வேலைக்கு எடுத்து காசு பார்த்தன. அந்த 40 டாலரில் கால்வாசியைச் சம்பளமாகக் கொடுத்தாலும் ஒரு நாளைக்கு மூவாயிரத்துச் சொச்சம் சம்பளம் தரலாம். அப்படி இருக்கும் போது இந்தியாவில் இந்தியச் சம்பளம் வாங்கும் மக்களோடு இவர்களை ஒப்பிடுவது தவறு.

சாஃப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவில் 70 டாலர் வாங்கிக் கொண்டு அதில் 40 – 50 டாலர் சம்பளமாகத் தருவதைக் காட்டிலும், இந்தியாவில் 40 டாலர் வாங்கிக் கொண்டு அதில் பத்து டாலரை ஊழியருக்கு சம்பளமாகக் கொடுப்பது இலாபகரமானது. இது நிறுவனங்களின் பார்வையில். அதே நேரம் இந்தியா இருக்கிற பொருளாதாரச் சூழலில் இந்த நிறுவனங்கள் தருவது அபரிமிதமான சம்பளம். மற்றப் படிப்புகளைப் படித்துவிட்டு மாதம் ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று சம்பளம் வாங்குவதைவிட எப்படியாவது மென்பொருள் நிறுவனங்களில் சேர்வது இலாபகரமானது.

சென்ற நான்கைந்து வருடங்களில் உலகப் பொருளாதாரம் வெகுவான முன்னேற்றம் கண்டது. குறிப்பாக அமெரிக்க வாடிக்கையாளர்களின் நுகர்திறனை நம்பி சீனாவின் தொழில்துறையும், இந்தியாவின் மென்பொருள் துறையும் வாழ்ந்தன. இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் கம்பெனிகளின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே போனது. தகுதியுள்ள ஆள் உடனடியாக வேண்டுமென்றால் பக்கத்து கம்பெனியில் வேலை செய்பவனுக்குச் சில ஆயிரங்களை அதிகமாகக் கொடுத்து இழுத்துக் கொள்வது நடந்தேறியது. “குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்” என்று கவுண்டமணி சொல்வது போல பேங்கில் வேலை செய்தவன், பேஃக்டரியில் வேலை செய்தவன் என எல்லோருமே சாஃப்ட்வேருக்குத் தாவினார்கள்.

புதிதாக இணைபவர்களுக்குச் சுளையான சம்பளம். புதிய பொறியியல் கல்லூரிகள் காளான்களாக முளைத்தன. B.E சீட் கிடைப்பதை விட C.A சீட் கிடைப்பது சிரமம். அத்தனை பொறியியல் கல்லூரிகள். இறுதியாண்டு முடிவதற்குள்ளாகக் கல்லூரி வளாகத்திற்கே வந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைக் கொடுத்து ‘புக்’ செய்தன கம்பெனிகள். முதலில் நிலவிய B.E, M.C.A படித்தவர்கள் மட்டுமே சாஃப்ட்வேரில் நுழையலாம் என்ற நிலை மாறி என்ன படித்தாலும் வேலை கிடைக்கும் என்ற நிலை உருவானது. B.Sc முடித்தவர்கள் மேற்படிப்பு படித்துக்கொண்டே வேலை செய்யலாம் என்று சில நிறுவனங்கள் நான்கு வருடம் தாவ முடியாமல் கட்டிப் போடும் வேலையைச் செய்கின்றன. இப்படி வேலைக்குச் சேரும் ஆட்கள் சுலபமாக கம்பெனி மாற மாட்டார்கள். மேலும் சம்பளமும் குறைவு. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்தவர்களுக்குக்கூடக் கதவுகளைத் திறந்து விட்டிருப்பதாகச் செய்தி.

அதிக வருவாய் தருகிற தொழில் அல்லது துறை திறமையானவர்களை ஈர்த்துக் கொள்ளும். சமீப காலமாக எல்லோருமே ஆர்வமாக பொறியியல் படிப்பதும், பாஸ் செய்து வெளியேறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியிருப்பதும் அதற்குச் சான்றாக இருக்கின்றன. டிமாண்டை ஈடு செய்வதற்கான படிப்படியாக அதிகரித்த சப்ளை இப்போது டிமாண்டைவிட அதிகரித்துவிட்டதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் சப்ளை அதிகரித்திருக்கிறது. இன்னொரு பக்கம் டிமாண்ட் மந்தமடைந்திருக்கிறது.

பிரபலமான மூன்றெழுத்து சாஃப்ட்வேர் நிறுவனம் வளாகத் தேர்வில் தேர்ந்தெடுத்த மாணவர்களை இரண்டு ஆண்டுகள் கழித்துச் சேரச் சொல்லிவிட்டதாம். இன்னொரு நிறுவனத்தில் ஐயாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புகிறார்களாம். சில இடங்களில் நிரந்தர வேலைக்கு ஆள் சேர்க்காமல் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்கிறார்கள். பரவாயில்லை என்று குறைவான சம்பளத்தில் அதிலும் ஒட்டிக்கொள்ள வேண்டிய நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் மென்பொருள் நிறுவனங்களில் பாதிப்பு அளவுக்கு அதிகமாக விவாதிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. எண்பதாயிரம் பேர் உள்ள நிறுவனம் ஐந்தாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றும் பெரிய சங்கதியல்ல. சதவீதக் கணக்கில் பார்த்தால் குறைவே. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரே நாளில் 1,900 பேரைப் பணிநீக்கம் செய்தது போல அதிரடியாக எதுவும் செய்யாமல் தினசரி அங்கொன்றும் இங்கொன்றுமாக சத்தமில்லாமல் ‘பிங்க் ஸ்லிப்’ கொடுப்பதால் மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் ஆட்குறைப்பின் எதிரொலி மெலிதாகவே கேட்கிறது.

உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதித்தாலும் அந்தப் பாதிப்பு தற்காலிகமானதாகவே இருக்கும். அவற்றில் இலாப விகிதம் குறையலாம். ஆனால் அவை ஒட்டு மொத்தமாக அழிந்துவிடாது. ஆட்டோமொபைல் கம்பெனிகள் சில வெறும் 5-6 சதவீத இலாபத்தில் இயங்கிய போது சாஃப்ட்வேர் கம்பெனிகள் 30 சதவீதம் இலாபத்தில் செயல்பட்ட காலமெல்லாம் மலையேறி விடும். ஆனாலும் அவை குறைவான இலாபத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவு கண்டால் அது இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், அப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே ஆட்குறைப்பு செய்து விட்டு செலவைச் சமாளிப்பதற்காக மேலும் அவுட்சோர்ஸிங் செய்யக் கூடும் என்ற வாதத்தையும் கவனிக்க வேண்டும். அதனால்கூட நமது சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு நன்மைதான்.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு முறை அந்த தேசத்தில் தேர்தல் நடக்கும் போதும் அவுட்சோர்ஸிங், ஓரினச் சேர்க்கைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் மற்றும் கருக்கலைப்பு ஆகிய மூன்று விஷயங்கள் அலசப்படும். எட்டு ஆண்டுகளாக ஜார்ஜ் புஷ் நடத்திய குடியரசுக் கட்சியின் ஆட்சி பொருளாதாரத்தை விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டதால் இந்த முறை அவுட்சோர்ஸிங் மேட்டருக்குக் கூடுதலான கவனம் கிடைத்திருக்கிறது. அமோகமான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கருதப்படும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அவுட்சோர்ஸ் செய்யாமல் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு சாதகமான வரிக் கொள்கைகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் கருத்துக் கணிப்புகள் ஒபாமாவுக்கு ஆதரவு இருப்பதாகச் சொன்னாலும், அமெரிக்காவும் சரி உலகமும் சரி ஒரு கறுப்பின அதிபரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனவா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!! கருத்துக் கணிப்பில் ‘நல்லவனாக’ ஒபாமாவுக்குத்தான் எனது ஓட்டு என்று சொல்லி விட்டு வாக்களிக்கும் போது அமெரிக்காவின் பெரும்பான்மை வெள்ளையர்கள் தமது இன உணர்வை வெளிப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாறாக ஒபாமா வென்றால் அது எதிர்பார்த்த ஒன்றாகவே இருக்கும்.

ஆனால் நமது சாஃப்ட்வேர் தொழிலைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கும் வந்தாலும் பெரிய மாறுதல் இருக்காது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அமெரிக்காவின் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்வதெல்லாம் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் என்பதால் ஒபாமாவின் ‘அவுட்சோர்ஸிங் எதிர்ப்பு’ சவுண்ட் எந்த அளவிற்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.

Letter edit by Shankar

 

 

 

உள்மனதின் ஆதங்கம்!
 
 
 
உலகெங்கிலும் மிக அதிகமாகக் கவனிக் கப்பட்டு, விவாதம் செய்யப்பட்டு, நடக்குமா நடக்காதா என கேள்விகள் எழுப்பப்பட்டு, அட நடந்தே விட்டதே என ஆச்சரியப்பட்டு பின் மிகுந்த எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு நடைபோட்டுக் கொண்டிருக்கும் சமீபத்திய நிகழ்வு அமெரிக்க அதிபர் தேர் தல்
இந்தியா போன்ற பின்தங்கிய நாட்டில் கோடிக்கணக்கான ஏழை எளியவர்கள், பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வர்களெல்லாம் ஓட்டுரிமை பெற்றிருந்த கால கட்டத்தில்கூட ஓட்டுரிமை பெறாதிருந்த கறுப்பினத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா நவம் பர் மாதம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். 1964 வரை அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது
இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒபாமா வின் தேர்வு நல்லதா, கெட்டதா எனும் வாதம் பல கோணங்களில் எடுத்துரைக்கப்படுகிறது
குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தில் ஒபாமா தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா வில் முதலீட்டு வருமானத்தின்மீது தற்போது விதிக்கப்படும் வரிவிகிதமான 15 சதவிகி தத்தை 20 சதவிகிதமாக அதிகரிப்பதாக கூறி னார்
முதலீட்டு வருமானம் என்பது பெரும்பா லும் அமெரிக்க தனவந்தர்களும் பெரிய நிதிநி றுவனங்களும் ஏனைய நாடுகளில் பங்குச் சந் தையில் பணத்தை முதலீடு செய்து அதிலி ருந்து பெறும் லாபம் ஆகும். அதன்மீது உட னடியாக வரி உயர்த்தப்பட்டால் நேரடியாக இந்தியப் பங்குச் சந்தைக்கு வரும் அமெரிக் கப் பண முதலீடு குறையும்
அடுத்து அமெரிக்காவில் தற்போது வேலைவாய்ப்புகள் குறைந்து வேலை யின்மை குறியீடு 5.7 சதவிகிதமாகியுள்ளதாக வும், அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கு விசா வழங்குவ தைக் குறைக்கவும், அமெரிக்கக் கம்பெனிகள் அயல்பணி ஒப்படைப்பு (ஞன்ற் ள்ர்ன்ழ்ஸ்ரீண்ய்ஞ்) எனும் முறையில் அமெரிக்காவில் இருந்துகொண்டு தாங்கள் செய்ய வேண்டிய வேலையை இந் தியா போன்ற நாட்டிற்குக் குறைந்த செலவில் மாற்றி விடுவதைத் தடுக்கவும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் எனவும் கூறியதாகத் தெரிய வருகிறது. இதனால் இந்தியா நேரடியாகப் பாதிக்கப்படலாம்
மேலும், அமெரிக்காவில் எத்தனால் எனப் படும் ஸ்பிரிட் தயாரிப்பை ஊக்கப்படுத்தி பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டினைச் சமா ளித்து சுற்றுப்புறச் சூழல் தூய்மையாக வழி செய்வதில் ஒபாமா, முழுமூச்சில் இறங்குவார் என்பது எல்லோருக்கும் தெரியும். எத்தனால் பெட்ரோல், டீசலுக்கு மாற்றுப்பொருள்
அது மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்ப டும் என்பதும், மக்காச்சோளம் பயிரிட்டால் ஏனைய உணவுப் பயிர்களைவிட அதிக லாபம் கிடைப்பதால் அமரிக்காவிலும் உண வுப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும். இந்தியா போன்ற நாடுகளும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகலாம்
இதுதவிர, உலக வர்த்தகத்தில், உலக வர்த் தக அமைப்பின் (ரபஞ) டோகா ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாமல், அமெரிக்க விவசாயிக ளுக்கு மானியத்தை அதிகப்படுத்தி, அதனால் இந்தியா போன்ற நாடுகளின், விவசாயப் பொருள்களில் வியாபார ஏற்றுமதி பாதிக்கப் படலாம். ரூபாயின் மதிப்பு குறையும்படி யான பல நடவடிக்கைகளைத் தொடர்வதன் மூலம் இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப் பும் குறையலாம்
இதுபோன்ற விஷயங்களில் ஓர் அதிபர் அமெரிக்க அரசின் அமைப்பு நிர்வாகத்தில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காட்டி கொள்கைகளையும் ஆட்சிமுறைக ளிலும் மாற்றம் செய்வது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷ யம் என்பதை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம்
நமது நாட்டைப்போல், ஓர் அரசு ஆட் சிக்கு வந்த உடன், இதற்கு முன் ஆட்சி செய்த அரசு நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு, வேண்டுமென்றே அத் திட்டங்களைக் கிடப்பில் போடுவது அமெரிக்காவைப் பொருத்தவரையில் கிடை யாது
இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிக்கட் டத்தில் ஜெர்மன் படைகள் உலகெங்கிலும் அடிவாங்கித் தோற்றுப் போகும் நிலைமைக் குத் தள்ளப்பட்டன. ஜெர்மன் படைகள் தோற்கடிக்கப்பட்டு, அமெரிக்க, ரஷிய மற் றும் ஆங்கிலப் படைகள் மூன்று முனைக ளில் முன்னேறி பெர்லின் நகரத்தை நெருங் கிக் கொண்டிருந்த வேளையில் பாதாள பதுங்கு இருப்பிடத்தில் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் இருந்தார் ஹிட்லர். அவரது நெருங்கிய சகா கோயபல்ஸ், பிரசார அமைச் சர் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சியுடன் 1945-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி, “”அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் மரணம டைந்துவிட்டார்
தலைவருக்கு என் வாழ்த்துகள்” என சந் தோஷமாக ஹிட்லரி டம் கூறினாராம்
அப்போது, அங்கே இருந்த ஒரு ஜெனரல் தனது நண்பர்களிடம் ரகசியமாக, “”தோல்வி யின் பாதிப்பால் நமது அமைச்சருக்கு ஒரு விஷயம் புரியவில்லை போலும். அமெரிக்கா போன்ற முதிர்ந்த ஜன நாயக நாட்டில் ஓர் அதிபர் மரணமடைந் தால் அடுத்தவர், அதாவது உதவி அதிபர் அவ ரது இடத்திற்கு வந்து அவர் விட்டுச் சென்ற பணியைச் சரியான வகையில் நடத்தி முடிப் பார்!” எனக் கூறினாராம்
ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்யும் நாட்டில் வேண்டுமானால் அடுத்து பதவியைக் கைப் பற்றும் சர்வாதிகாரியின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் எனச் சொல்ல முடியாது
ஆனால், அமெரிக்க ஜனநாயக அமைப்பில் நிர்வாகக் கட்டமைப்பு, சட்டதிட்டங்கள், நடைமுறை விதிகள் மிகத் தெளிவான வகை யில் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுவத னால், தனிமனிதர்களின் பதவி ஏற்பு பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வராது
மேலும், அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு அர சியல் கட்சிகள் உண்டு. நிறைய விஷயங்களில் அவற்றுக்கு இடையில் பெரிய வித்தியாசங் கள் கிடையாது. இதைப்பற்றி கிண்டலாகக் கூறும்போது, “”ஒரே மாதிரியான ஒயினை இரண்டு பாட்டில்களில் ஊற்றி ஒன்றில் குடி யரசுக் கட்சி எனவும் மற்றொன்றில் ஜனநாய கக் கட்சி எனவும் லேபிள்கள் ஒட்டியது போன்றது” என்று கூறுவார்கள்
எனவே, ஒபாமாவின் வெற்றி மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லா மல் போகலாம்
பொதுநோக்குப்படி இந்தியா விற்கு எந்த காலகட்டத்திலும் குடிய ரசுக் கட்சி இணக்கமாகவும், ஜனநாய கக் கட்சி ஓரளவு முரண்பட்டும் இருப்பது அனுபவம் தந்த பாடம்
உதாரணமாக, ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி அணுஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் எல்லா நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என்பதில் தீவிர மாக இருக்கும். காஷ்மீர் விஷயத்தில் தலை யிட விரும்பும். இவை இரண்டும் நமக்கு அனு சரணையான விஷயங்கள் அல்ல
இதுபோன்ற அம்சங்களைத் தள்ளி வைத் துவிட்டு இந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதி பர் தேர்தல் நமக்கு அளித்துள்ள மிகவும் தெளிவான படிப்பினை என்ன? இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் பிரதமராக வரு வது சாத்தியம். ஏனென்றால், இங்கே அப்பத விக்குத் தேர்தல் நேரடியாக நடப்பதில்லை
ஆனால் அமெரிக்க அதிபரை மக்கள் நேரடி யாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். எனவே, அமெரிக்க மக்கள் ஒபாமா மிகச்சிறந்த அரசி யல் தலைவர் எனக் கருதியதனால்தான் அவ ரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவர் கறுப்பர் இனத்தவர் என்பதால் இந்தத் தேர்தலின் மூலம் அமெரிக்கா தன் மீது படிந்துள்ள இன வெறி என்ற சாயத்தை அழித்தொழித்துள் ளது என்பது இன்னொரு சாதனை
அமெரிக்க மக்க ளின் முன் உள்ள மிகச் சிக்கலான ஒரு பிரச்னை மருத்துவம் பற்றியது. அங்கே தனி யார் இன்சூரன்ஸ் மூலம்தான் மருத்துவச் செலவுகளை சாதா ரண மக்கள் சமாளிக்க முடியும். ஆனால் லாப நோக்கில் நடைபெ றும் காப்பீட்டு கம்பெ னிகள் மருத்துவச் செலவு செய்த பின்னர் செலவுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக் கும்போது ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி தட்டிக்கழிப்பது, குறைந்த தொகையை வழங்குவது, காலம் தாழ்த்துவது என பல ஆண்டுகள் நடந்து இந்த நடைமுறை களில் மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர்
அரசு ஏதேனும் செய்து மருத்துவத்துறையை சீர்செய்ய வேண்டும் எனப் பலரும் எதிர் பார்க்கிறார்கள்
இரண்டு அதிபர் வேட்பாளர்களும் கலந்து கொண்ட ஒரு விவாதத்தின்போது ஒரு வாக் காளர், மருத்துவம், பொதுச் சுகாதாரம் ஆகி யவற்றை மக்களுக்கு அளிப்பது, ஓர் அரசின் கடமையா அல்லது பெரிய சன்மானமா எனக் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த ஒபாமா, “”ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அரசி டம் மருத்துவ வசதியை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. எனது அன்னை அவரது 53-வது வயதில் புற்றுநோயால் இறந்தார்
அவரது மருத்துவச் செலவுக்காக மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகளை அணுகியபோது, இந்த வியாதி இன்சூரன்ஸ் செய்வதற்கு முன் னரேயே உங்களுக்கு இருந்ததா, இல்லையா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு ஏற் கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த அவரை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார் கள். மருத்துவக் காப்பீட்டு கம்பெனிகளின் ஏமாற்று வேலைகளிலிருந்து அமெரிக்க மக்க ளைக் காப்பாற்ற கடுமையான நடவடிக்கை கள் தேவை” என்றார். இந்த தெளிவான பதில் இப் பிரச்னையில் சிக்கியிருந்த மக்களை மிக வும் கவர்ந்தது
அதேபோல், “”பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உள்ளனர். நான் பதவிக்கு வந்தால் பின்லேட னைக் கொல்வேன், அல் கொய்தாவை அழிப் பேன், அதுவே நமது நாட்டிற்கான மிகச்சி றந்த பாதுகாப்பு’ எனவும் ஒபாமா கூறினார்
ஆக, இரண்டு வேட்பாளர்களில் திறமை யும் உறுதியும் மிக்கவர் என தனது பேச்சாற் றல், சிந்தனைத் தெளிவு ஆகியவற்றால் மக்கள் மன்றத்தில் நிரூபித்தவர் ஒபாமா. அவரது மனைவி மிச்சல் ஒபாமா ஆகஸ்ட் 26-ம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவு ஒவ்வோர் இந்திய னும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று: “”எனது அண்ணன், 6 அடி 6 அங்குல உயரமா னவர். என்னை அன்புடன் நேசித்து குழந் தைப்பருவம் முதல் வளர்த்தவர்
19 மாதங்களாக இந்தத் தேர்தலில் என் கண வர் தீவிரமாக ஈடுபட எனக்கும் அவருக்கும் உதவினார். என்னை ஆசீர்வதிக்கும் அன்பும் பாசமுமுடைய அண்ணன் இங்கே என்னு டன் இருக்கின்றார். நான் என் கணவரை நேசிக்கும் ஒரு நல்ல மனைவியாக உங்கள் முன் நின்று, அவர் ஒரு தலைசிறந்த அதிபராக இருப்பார் என உறுதியளிக்கிறேன்
என் தனி உலகத்தின் மையமாக, என் இத யத்தின் இதயமாக இரண்டு மகள்கள் இருக்கி றார்கள். இரவில் படுக்கப்போகும்போதும், காலை கண்விழிக்கும்போதும் எனது எண் ணத்தில் இந்தக் குழந்தைகள் இருப்பதுபோ லத்தான் எல்லா அமெரிக்கத் தாய்மார்களின் குழந்தைகளும் என்பது நமது பாரம்பரியப் பெருமை. அவர்களது எதிர்காலம் இந்தத் தேர்தல் முடிவில் உன்னதமாக வேண்டும்
சிகாகோ நகரின் தென்பகுதியில் வளர்ந்தவள் நான். என் தந்தை ஒரு தொழிலாளி, என் தாய் என்னையும் என் அண்ணனையும் பாதுகாப் பாக அன்புடன் வளர்த்த ஒரு குடும்பத்தாய்
என் தந்தை தனது 30-வது வயது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதை எங்களிடமிருந்து மறைத்துக்கொண்டு அன் பையும் பாசத்தையும் பொழிந்து எங்களை வளர்த்து ஆளாக்கிவிட்டார். எனவேதான், நான் நல்ல தாயாக, மனைவியாக சரியான ஓர் அமெரிக்கப் பெண்மணியாக உங்கள் முன் நிற்கிறேன்”! மேலே கூறிய கருத்துகளை கூர்ந்து கவனி யுங்கள். நல்ல குடும்பம் நல்லவர்களை உரு வாக்கும். நல்லவர்கள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியுடன் இருந்தால்தான் பொதுவாழ் வில் நேர்மையைக் கடைப்பிடிக்க முடியும்
இதனுடன் சேர்த்து திறமையுடன் சட்டக்கல் லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றய ஒரு நபர் தன் நேர்மையான நிர்வாகத்தை அமெரிக்க மக்களுக்கு அளிக்கத் தயாராகி வந் திருப்பதுதான் ஒபாமா பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்
கறுப்பு இனத்தவராக இருந்தாலும் திறமை யானவர் ஒபாமா. தனிமனிதனின் ஆசாபா சங்கள், விருப்பு வெறுப்புகள் அரசின் நடவ டிக்கைகளையும் திட்டங்களையும் அமெரிக் காவில் கட்டுப்படுத்த முடியாது. “”எனதருமை தாயகமே! நீ எப்போது இப்படி ஆவாய்?” எனது உள் மனது ஆதங்கப்படுகிறதே, என் செய்ய?

 

பாமக – வரைவு நிதி நிலை அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் அறிவார்ந்த முயற்சிகள் இது வரை அவ்வளவாக பொது தளத்தில் அறியப்பட்டதில்லை, கடந்த சில ஆண்டுகளாக பாமக தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வரைவு நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும், இதே போன்று பாமக சார்பில் மாற்று கல்வித்திட்டங்கள் குறித்தான இரு நாள் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன, அது மட்டுமின்றி மாணவர்களுக்கு பாமக சார்பில் பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன, அதில் சில நிமிடங்கள் மட்டுமே கட்சி விடயங்கள் பேசப்படும் அதுவும் கூட கட்சி தோன்றிய வரலாறு மட்டுமே, மற்றவையெல்லாம் மாணவர்களுக்கான அறிவு சார்ந்த விடயங்கள் நடத்தப்படும்.

தமிழக அரசிற்கான 2006-07ம் ஆண்டிற்கான வரைவு நிதிநிலை அறிக்கையை PDF கோப்பாக இங்கே இணைத்துள்ளேன், இந்த சுட்டியில் முயற்சி செய்யவும் அறிக்கையை தரவிறக்கி கொள்ளலாம்.

வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள் மூலம் வருவாய் பெருக்கம், வரியில்லா வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் பற்றி விளக்கமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பூங்காக்கள்(IT Parks) மட்டுமே கேள்விப்பட்டுள்ளோம் நாம், இந்த அறிக்கையில் நெசவாளர் நலன்களுக்காக 100 நெசவுத்தொழில் பூங்காக்கள் அமைப்பது, அதன் மூலம் சுமார் 10,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியன இந்த அறிக்கையில் உள்ளன.

ஒடுக்கப்பட்ட மக்களான விவசாயிகள், நெசவாளர்கள், தாழ்த்தப்படவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தலித் மக்களுக்கான சிறப்புக்கூறு திட்ட (Special Component Plan) ஒதுக்கீடும், அமலாக்கமும் முறையாக, முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், தலித் மக்களுக்கான 21 அம்சம் கொண்ட போபால் பிரகடனம் தமிழகத்திலும் செயல்படுத்தப்படும், ஆதிதிராவிட மக்களுக்கு அளிக்கும் சலுகைகள் அனைத்து மதங்களை பின்பற்றும் ஆதிதிராவிட மக்களுக்கும் அளிக்கப்படும்.

சமூகநீதிக்கான இடஒதுக்கீடு, நீதித்துறையில் இடஒதுக்கீடு பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது, மேலும் தமிழக அரசில் இடஒதுக்கீடு தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து நிரப்பப்படாமல் இருக்கும் இடஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பான ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.

பள்ளிகல்வி, உயர்கல்வி, அரசு ஊழியர்கள் நலன், வேலை வாய்ப்பு பற்றியும் அறிக்கை முக்கியமாக பேசுகின்றது.

சுற்று சூழல் மற்றும் வனநலன், புதிய மாவட்டங்கள், பின் தங்கிய மாவட்டங்கள் வளர்ச்சி பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

முழுமையான மதுவிலக்கே பாமகவின் இலக்கு என்றாலும் தமிழகத்தில் மது விற்பனை அனுமதிக்கப்படும் வரை கள்ளுக்கடைகள் அனுமதிக்கப்படும், பனை தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற வழிவகை செய்யப்படும்.

“பகுத்தறிவு பகலவன்” தந்தைப் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 சமூக நீதி நாளாக அறிவிக்கப்படும்.

அதிமுக அரசின் நிதி செயல்பாட்டு முறைகேடுகள், வேகமாக வளர்ந்த அரசின் கடன்கள், திட்டங்களை நிறைவேற்றாத மற்றும் மந்தமாக செயல்படுத்தியதாலும் 119 திட்டங்களில் ரூ.5337.67 கோடியளவிலான நிதி ஒப்புவிப்பு 46 திட்டங்களில் 100 சதவீத நிதிஒப்புவிப்பு என அதிமுக அரசில் நடந்த நிர்வாக கோளாறுகளையும் சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை

நன்றி: பசுமை தாயகம் செயலாளர் அருள்

பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு

பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு

இன்று காலை சென்னையில் உள்ள பிரபல உள்ளரங்கு படப்பிடிப்பு தளத்தினுள் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
————————————
————————————
——————————–
பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு காட்சியில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை, இதனால் இயக்குனருடன் சச்சரவு ஏற்பட்டு படப்பிடிப்பு நடைபெறவில்லை என நமது ஓநாயார் செய்தி தந்தார்.

செய்திக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு? செய்தியை திரிக்கும் ஒரு சோமாறித்தனம், உத்தி என திட்டுபவர்களே ஒரு நிமிடம் சிந்திக்கவும், பதிவு என் பதிவு , தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.மேலும் தலைப்பு, செய்தியின் ஒரு வரி என்பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.

சோ அவர்கள் ஆசிரியராக இருக்கும் துக்ளக் வார இதழில் பதிப்பிக்கப்பட்ட ஒரு செய்தி.

அதன் தலைப்பு

மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற வேண்டும்” – மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்…

ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம் புது டெல்லியில் CBSE மற்றும் ICSE என இரண்டு வகை கல்வித்திட்டங்கள் மட்டுமே உள்ளன, ஆதலால் CBSE பாடதிட்டத்தில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

டெல்லி தமிழ்ப் பள்ளி ஆண்,பெண் இரு பாலரும் படிக்கும் பள்ளி, மிகவும் புதிய சூழ்நிலையில் வளரும் பெண் குழந்தைகளை பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து ‘மேடர்-டே’ என்ற பெண்களி பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம்.

என் மகள்களின் பெயர்,நகராட்சி அலுவலகம்… என்று மெனக்கெட்ட நீங்கள், இன்னும் கொஞ்சம் சிரமம் எடுத்து துருவி துருவி ஆராய்ந்திருந்திருக்கலாம்.

இங்கு பொதுவாக எல்லா பள்ளி கூடத்திலும் முதல் மொழிப் பாடம் ஆங்கிலம், இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி, மூன்றாம் மொழிப்பாடம் ப்ரெஞ்ச் அல்லது சமஸ்கிரதம்.

தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழிப் பாடமாக இருப்பினும் ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் இரா.அன்புமணி ஆவர்கள் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ‘மேடர்-டே’ பள்ளியின் முதல்வர் சகோதரி டோரினாவாஸ் அவர்கள், சிறப்பு சலுகையாக என் மகள்கள் இருவரும் அவர்களின் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழிப்பாடமாக அனுமதி அளித்தார்கள். இவர்கள் இருவருக்காக மட்டுமே தமிழாசிரியை ஒருவரை நியமிக்க முடியாத காரணத்தினால் லோதி எஸ்டேட்டில் உள்ள டெல்லி தமிழ்ப் பள்ளியில் படிக்க சிறப்பு அனுமதி அளித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிடும் ஏழாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு உரைநடை, செய்யுள் பகுதி கொண்ட பாடபுத்தகங்களைத்தான் இவர்கள் படிக்கிறார்கள். மூன்றாம் மொழித் தேர்வு சமயம் கேள்வித்தாள்கள் தயாரித்து திருத்தி மதிப்பெண்களை ‘மேடர்-டே’ பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடும்படி ஒரு புது ஏற்பாடு செய்யப்படிருக்கிறது.

இத்தனை சிரமும் எதற்காக? குழந்தைகள் தமிழைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தான், ஏதோ துக்ளக் கேள்வி கேட்டு விட்டது என்பதற்காகவோ, தமிழ் பாதுகாப்பிற்காக போராடுகிறோம் என்பதற்காகவோ அல்ல, குடும்பமே தமிழின் மேல் உள்ள பற்றினால் பாசத்தினால் ஏப்ரல் மாதமே சிறப்பு அனுமதி வாங்கி விட்டோம்.

குழந்தைகள் மற்ற பாடங்களை விட தமிழில் எப்போதுமே எடுத்திருக்கிறார்கள். தாய்மேல் பாசத்தை காட்ட மற்றவர் சொல்லித் தரவேண்டியதில்லை, தமிழ்ப்பற்றை நீங்கள் சொல்லித் தந்து நாங்களோ நாங்களொ எங்கள் பிள்ளைகளோ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

டெல்லியில் ஹிந்தி மொழியை படிக்காமல் ஒருவர் பள்ளி கூட படிப்பைக் கூட முடிக்க முடியாது, ஆனால் தமிழ் மொழியை படிக்காமல் தமிழ்நாட்டில் ஒருவர் பள்ளி,கல்லூரி படிப்பை முடிக்க முடியும்.

எல்லோருக்கும் இருக்கும் தாய் மொழிப்பற்று ஏன் தமிழனுக்கு இருப்பதில்லை? அதை உணர்த்துவதற்குதான் மருத்துவர் ஐயா அவர்கள் தமிழ்ப் பாதுகாப்பு போராட்டங்களை நடத்துகிறார்.

ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தை 12-ஆம் வகுப்புக்குள் ஒரு மொழிப்பாடமாக கற்று மாணவர்கள் ஆங்கில புலமை பெற வேண்டும். அதே சமயம் கட்டாயம் தமிழையும் பிழையின்றி பிற மொழிக் கலப்பில்லாமல் தெளிவாக பேச வேண்டும் என்பதே அவரின் அவா. அந்த உண்மையை புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தங்களுக்கு இல்லையா? அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறீர்களா?

ஒரு பிரபல பத்திரிக்கையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தங்களுடைய பத்திரிக்கையில் தவறான தகவல்களை தந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் அளித்துள்ளது. ஆகவே என்னுடைய இந்த மறுப்பு கடித்தையும் வெளியிடுவீர்கள் என நம்புகின்றோம்.
– சௌமியா அன்புமணி
ஆசிரியர், பசுமை தாயகம் – சுற்று சூழல் சென்னை-34.

என்ன ஒரு அருமையான தலைப்பு, ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
டோண்டு அய்யாவின் ஜோவின் கேள்விக்கான பதில் கீழே
//டோண்டு ஐயா,
உங்களுக்கு பிடித்த துக்ளக்-கின் இந்த வார இதழில் வெளிவந்துள்ள அன்புமணியின் துணைவியாரின் கடிதத்தை படியுங்கள் .அதோடு அதற்கு தலைப்பு கொடுத்திருக்கும் விதத்தில் சோ(மாரி)த்தனத்தை கொஞ்சம் கவனியுங்கள்.நன்றி!
# posted by ஜோ : July 30, 2005 8:57 PM

தலைப்பில் என்ன தவறை கண்டீர்கள் ஜோ அவர்களே?
“மாணவர்கள் ஆங்கிலப் புலமை பெற வேண்டும்” என்று அன்புமணி அவர்களின் மனைவி கூறியது உண்மைதானே? தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.//

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ அவர்கள் கீழ் காணும் தலைப்புகளைக் கூட இந்த கடித்திற்கு தேர்ந்தெடுத்திருக்கலாம்.

1.இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி, மூன்றாம் மொழிப்பாடம் ப்ரெஞ்ச் அல்லது சமஸ்கிரதம் – மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்…

2.ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும் – மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்…

3.புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தங்களுக்கு இல்லை – மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்…

இன்னும் என்ன என்ன தலைப்பு வைக்கலாம் என ஒரு போட்டி வைப்போம் எல்லாம் நம் திறமையை காண்பிப்போம்.

டோண்டு அய்யாவின் இந்த பதிவிற்கான சில விளக்கங்கள்

//வலைப்பூ பாவிக்கும் பல அன்புமணி தாங்கிகள் இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்//
மேலே உள்ள தலைப்பு அதற்கு நியாயம் கற்பிக்கும் ‘சோ’வின் தாங்கிகள் அன்புமணி தாங்கிகள் என கூறுவது வியப்பொன்றுமில்லை. ‘சோ’வின் தாங்கிகள் என நான் குறிப்பிட முக்கிய காரணம் முதலில் அன்புமணி தாங்கி என்பதைப்போல ‘சோ’ தாங்கி என எழுதினால் ‘சோ’ விற்கும் ‘தாங்கி’ இடையில் உள்ள வெற்றிடம் காணமல் போய் வேறு அர்த்தம் கற்பிக்கப் படலாம், மேற்கண்ட தலைப்பிற்கே நியாயம் கற்பிக்கும் போது இது நடக்காது என என்னால் உறுதியாக கூற முடியாததால் எச்சரிக்கையாக ‘சோவின்’ என மாற்றிவிட்டேன்.

//தமிழ்நாட்டில் இருந்திருந்தால் தன் குழந்தைகளை தமிழ் பள்ளியிலேயே படிக்க வைத்திருப்பாராம். அப்பதிவாளரின் போறாத காலம் தில்லியில் இருபது வருடங்கள் இருந்து தன் பெண்ணை அப்பள்ளிகளில் ஒன்றில் படிக்க வைத்த என்னிடம் போய் அதைக் கூறினார். அவருக்கு அப்போதே தேவையான பதில் கூறினேன்.
//
சிறிது நாட்களுக்கு பிறகு இதற்கு பதிலாக நான் கூறியது தில்லியிலிருக்கும் நண்பருடன் பேசியபோது மேடர் டே பள்ளியின் உள் கட்டமைப்பு,ஆசிரியர்கள், தரம் ஆகியவற்றை பற்றி யும் மற்ற தமிழை ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரும் பள்ளியின் தரம் பற்றி ஒப்பிட்டு பார்த்தால் மேடர் டே சிறந்த பள்ளி என்றார், எனவே வசதியாக தமிழை இரண்டாம் சொல்லித்தரும் பள்ளிகளின் கல்வி கட்டணம் குறைவு என்று கூறிய நீங்கள் தரத்தைப் பற்றி சொல்லவில்லை என்ற போது தான் தமிழ் கற்றுத்தரும் சிறந்த பள்ளிகள் தரமான பள்ளிகள் என்றார் வசதியாக மேட்டர் டே பள்ளியின் தரம் அந்த பள்ளிகளைவிட மேல் என மறுக்காமல், தமிழகத்திலே இருந்தால் நல்ல தமிழ் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்திருப்பார் என கூறிய போது அந்த குழந்தைகளின் தாத்தாவிற்கு(மருத்துவர் இராமதாசு) தமிழ்நாட்டிலே தானே இருக்கின்றார் அவரிடத்திலில்லாத ஆள்,அம்பு படை பலமா அந்த குழந்தைகள் தமிழகத்திலேயே இருக்கலாமே, (அதாவது சிறிய குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்திருக்க வேண்டும் அவர்களின் தந்தை, தாத்தா தமிழ் பற்றி பேசினால் ) இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது, விவாதம் வேறு திசைக்கு சென்றதால் இனி பேசிப் புண்ணியமில்லை என்று அந்த பதிவிலிருந்து ஒதுங்கிவிட்டேன்.

தரம் என்பது ஆளுக்கு ஆள் இடத்திற்கு இடம் மாறுபடும், உதாரணத்திற்கு அரசு ஊழியரின் குழந்தைக்கு நகராட்சிப் பள்ளியை விட கிறுத்துவ திருச்சபைகள் இலவசமாக நடத்தும் பள்ளிகள் தரமானது, பொறியாளருக்கு அதைவிட மேம்பட்ட பள்ளிகள், பொறியாளர் தரம் என்று நம்புவதையும் விட மேம்பட்ட பள்ளிகள் இல்லையா என்ன?

மேடர்-டே பள்ளியின் தரத்திற்கான ஒரு சிறிய உதாரணம்

Mater Dei school
AD-Venture

Beats

Indian Music Competition
roup song(Sr.)

Best Team
Over-all Best School

1st Position

http://www.dpsrkp.net/links/activity.htm

அய்யா கூறிய பள்ளி மேற்கண்ட சுட்டியில் எங்கே உள்ளது என எனக்கு தெரியாமல்.

(ஹைய்யா இனி மேடர்-டே பள்ளியின் இணைய கொ.ப.ச. குழலில் தான் என கேள்விகேட்கலாம் என நினைப்பவர்களே நான் ஓடிவிட்டேன்)

நான் பள்ளிகளின் தரம் பற்றி கூறியது கூட நண்பருடன் பேசியதின் அடிப்படையில் அமைச்சர் அன்புமணியுடன் பேசியதின் அடிப்படை என கூறவில்லை.

//இல்லாவிட்டால் தொண்டன் அடிபட்டு சாவான், அன்புமணிகள் மந்திரிகளாவார்கள்.//
தலைவன் கல்லடியும் சொல்லடியும் தலைமறைவு வாழ்க்கையயும் நடத்தி உயிரையும் பணயம் வைத்து தொண்டர்களை மட்டுமல்ல என் போன்ற சாதாரணரையும் வாழ வைத்ததால் தான் இன்று அன்புமணி அமைச்சராக உள்ளார், தலைவனுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அன்புமணி தந்தை இல்லாத பிள்ளையாகத் தான் வளர்ந்திருப்பார், எனவே அமைச்சராக அன்புமணியிருப்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

இந்த விடயத்தில் பத்திரிக்கைகளின் பங்கு
பத்திரிக்கைகள் மிக சாதுரியமாக இந்த விடயத்தில் நடந்து கொண்டன, தினமலரும், குமுதமும் செய்தியாகவோ கட்டுரையாகவோ மேடர்-டே அன்புமணி குழந்தைகள் பற்றி குறிப்பிடவில்லை, வாசகர் கடிதம், இது உங்கள் இடம், அந்துமணி வாசகர் கேள்வி பதில்கள் என வாசகர்கள் பெயரை சொல்லிதான் எழுதின, ஏனென்றால் நாளை இந்த செய்தி பொய் என தெரிந்தால் எச்சரிக்கையாக வாசகர்கள் எழுதியது இது பத்திரிக்கை செய்தி இல்லையே இது என கூறிவிடலாம், வழக்கு என்று போனால் கூட தப்பிவிடலாம்.

எத்தனை முறை இந்த கடிதங்களை பிரசுரித்தனர் (உதவி ஆசிரியர்களே வாசகர்களின் பெயரில் கடிதம் எழுதியிருக்கலாம்), ஒரே ஒரு முறையாவது அன்புமணியிடம் செய்தியை உறுதி செய்து கொண்டனரா? எத்தனை முறை இந்த பிரச்சினைக்கு பிறகு அன்புமணியும் மருத்துவர் இராம்தாசுவிம் பேட்டியளித்தனர், ஒரே ஒரு முறையாவது இதைப் பற்றி கேள்விகேட்டனரா? (நமது எம்ஜியாரிலிருந்தும் முரசொலியிலிருந்தும் வரும் செய்திகளை தயவு செய்து உதாரணத்திற்கு காட்டாதீர்கள்), ஏன் அன்புமணியோ, மருத்துவர் இராமதாசுவோ சொல்லியிருக்கலாமே என கேள்வி கேட்பார்கள் உடனே, இப்படி வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் மத்திய அமைச்சர் அன்புமணி , மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்வது மட்டுமே முழு நேர வேலையாக இருக்கும், இங்கே இணையத்திலே நான் சொல்லிக்கொண்டிருப்பது போல.

தின மலரும், குமுதமும் துக்ளக்கும் அமைச்சர் அன்புமணியின் மனைவியின் கடிதத்திற்கு பிறகு தங்களின் தவறான செய்தி மற்றும் பிரச்சாரத்திற்கு மன்னிப்பு கேட்பார்களா அவர்களின் பத்திரிக்கையில், இது பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான்.

பத்திரிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன அவர்களுக்கு பாமக மீதும் அமைச்சர் அன்புமணி மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதுமான காழ்ப்புணர்ச்சியை.

நான் வலைப்பதிய வந்ததன் முக்கிய நோக்கம் பாமகவைப்பற்றி எழுத அல்ல, ஆனால் பாமக மீதான நச்சு பிரச்சாரம் வலைப்பூக்களில் ஓங்கியிருந்த போது அதைப்பார்த்தும் எனக்கு தெரிந்த உண்மைகளை கருத்துகளை சொல்லாமல் இருந்தால் அது நான் செய்யும் துரோகம். அது மட்டுமின்றி prejudice மனப்பான்மையுள்ளவர்களிடம் எத்தனை எடுத்துக் கூறினாலும் மாற்ற முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும், பத்திரிக்கைகள் சில வலைப்பதிவர்களின் பாமக விரோத மனப்பாண்மை போக்கினால் பரப்பட்ட விடயங்கள் நடுநிலையாளர்களிடத்தில் படிந்திருக்கும், அவர்களுக்கு பாமக வின் மற்றொரு பக்கத்தையும் கோணத்தையும் காண்பிப்பது தான் என் நோக்கம், நடுநிலையாளர்கள் தான் என்னுடைய டார்கெட் ஆடியன்ஸ், அதில் பெருமளவு வெற்றியும் பெற்றேன் சிலருக்கு இதெல்லாம் எனக்கு தெரியாதே இப்போது தான் புரிந்தது என்றனர், தனி மடல்கள் நேரடி பேச்சுகள் மூலமாக எனக்கு இதெல்லாம் தெரியவந்தது. என் நோக்கமும் நிறைவேறியது.

பாமக வோ, மருத்துவர் இராமதாசுவோ, மத்திய அமைச்சர் அன்புமணியோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எங்கேயும் நான் குறிப்பிடவுமில்லை, நடுநிலையான எல்லோருக்கும் கடைபிடிக்கும் அளவுகோலோடு விமர்சனம் செய்யுங்கள், சோவின் தாங்கிகளாகவோ, வேறு எவரின் தாங்கிகளாகவோ இருந்து கொண்டு அன்புமணி தாங்கிகளை கேள்வி கேட்கும்முன் ஒரு நிமிடம் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள் அது சொல்லும்.

நான் வலைப்பதிய வந்ததன் முக்கிய நோக்கம் பாமகவைப்பற்றி எழுத அல்ல, என் எழுத்துக்கள் இதுவரை ஒரு 20 என்ற எண்ணிக்கையிலான நட்பு வட்டாரத்தில் இருந்தது அதை 200, 500 என விரிவாக்கிக் கொள்ளத்தான் இங்கே வந்தேன், இந்த பதிவிற்கு இத்தனை பெரிய விளக்க பதிவு எழுத வேண்டுமென்ற எண்ணமில்லை, ஆனால் என்னிடம் பதிலில்லாததால் தான் விளக்கம் தரவில்லை என்று குறிப்பிடப் படலாம் என்பதால் தான் எழுதினேன்.

இப்படி பதில் சொல்லிக்கொண்டே போக வேண்டியது தான், முடிவில்லா விவாதம் என் மற்ற எழுத்துக் களையும் பாதிக்குமென்பதால் இத்துடன் பாமக தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலையை நிறுத்துகின்றேன்.

பாமக பற்றி மீண்டும் அதே செட் கேள்விகளுடன் வந்தால் என் முந்தைய பதிவுகளில் இருக்கும் அதற்கான விடைகள், புதிய கேள்விகள் வந்தால் நேரம் கிடைத்தால் பதிலிறுக்கின்றேன்.

நன்றி : துக்ளக்
நன்றி : டோண்டு ராகவன் அய்யா
நன்றி : இத்தனை பொறுமையாக படித்த உங்களுக்கும்

எழுத்து பிழையிருப்பின் மன்னிக்கவும் இரண்டு மணி நேரங்கள் தட்டச்சு செய்தேன், நள்ளிரவிற்கு மேலாகிவிட்டதாலும் நாளை வேலைநாள் என்பதாலும் மீண்டும் படித்து பார்த்து சரி செய்ய முடியவில்லை

நன்றி

 உளவுப் பிரிவு

னது 14 ஆண்டு பத்திரிக்கைத்துறை பணியில் எத்தனையோ உளவுப் பிரிவினரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்

எனக்குத் தெரிந்து நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறையை நான் கண்டதில்லை.

நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.

 சாத்தியம்தானா?
 
ஆண்டுகள் 61 கடந்தும், சுதந்திர இந்தியாவில் இன்னும் அடிப் படை சுகாதார வசதியான, கழிப்பறை வசதியைக்கூட நம் மால் கொடுக்க முடியவில்லை என்பது இந்தியா விரைவிலேயே பொருளாதார வல்லரசாக வலம் வரப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு வெறும் கனவாகத்தான் இருக்குமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகி றது
ஐக்கிய நாடுகள் சபையின் “மில்லினியம் வளர்ச்சி இலக்கு’ என்று கி.பி. 2001-ல் புதிய ஆயிரம் ஆண்டின் இலக்குகள் இன்னன்ன என்று உலக நாடுகள் ஒன்றுகூடித் தீர்மானித்தன. அந்த சபதங்களை அடுத்த நூறே ஆண்டுகளில் நிறைவேற்றுவது என்று ஐ.நா. சபை யில் உறுதிபூண்டன. உலகில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் குடிக்கத் தண்ணீர், இருக்க இடம், கழிவுநீர் வசதி மற்றும் கழிவறை கள் என்று பல லட்சியங்கள் பட்டியலிடப்பட்டன. அந்த லட்சியங்க ளில் ஒன்றான வீடுதோறும் கழிவறை வசதி என்பது இந்தியாவைப் பொருத்தவரை, அடுத்த ஒரு நூறாண்டு காலத்தில் சாத்தியம்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது
2008 ஜனவரி நிலவரப்படி, இந்தியக் கிராமங்களில் வசிப்பவர்க ளில் சரிபாதியினர்கூட கழிவறை வசதிகள் என்னவென்றே தெரியாத வர்கள். ஐ.நா. சபையின் லட்சியத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடைவது என்றால், நாம் இப்போதுமுதல் ஒரு நிமிடத்துக்கு 78 கழி வறைகள் என்கிற கணக்கில் தொடர்ந்து கழிவறை வசதிகளை ஏற்ப டுத்தியாக வேண்டும்
குடியிருக்க முறையான வீடுகளே இல்லாமல் குடிசைப்பகுதிகளி லும், சாலையோரங்களிலும் வாழ்பவர்களை விட்டுவிடுவோம். பெய ரளவில் மேலே கூரையும், சுற்றுச்சுவரும், வாசற்கதவுமாக வீடுகளில் வசிப்பவர்கள் உள்பட, இந்தியாவில் உள்ள வீடுகளில் கழிவறை வச திகள் இல்லாத வீடுகள் எத்தனை தெரியுமா? 12 கோடியே 20 லட் சத்து 78 ஆயிரத்து 136. இன்னும் மின்சார வசதி இல்லாத வீடுகளின் எண்ணிக்கை 8 கோடியே 47 லட்சத்து 54 ஆயிரத்து 881
மின்வசதியும், கழிவறை வசதியும் மட்டும்தானா இல்லை? இந்தக் குடும்பங்களில் பலர் கழிவுநீரை வெளியேற்றும் வடிகால் வசதிகூட இல்லாமல்தான் வாழ்கின்றனர். மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றின்படி, கழிப்பிட வசதிக் குறைவால் ஏற்படும் தொற்றுநோய் மற்றும் சுகாதாரக் கேடுகள் இந்தியாவுக்கு ஏற் படுத்தும் பாதிப்பு ஆண்டொன்றுக்கு ரூ. 1,200 கோடி. கழிவறைகள் இல்லாததால், சுமார் 60 கோடிப்பேர், திறந்தவெளிகளில் தங்களது இயற்கை அழைப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந் தம் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது
இன்னும் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் இருக்கின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2006-ல் வெளியிட்டிருக் கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் உள்ள பள்ளிகளில் வெறும் 37.42 சதவிகிதம் பள்ளிகளில்தான் பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறைகள் இருப்பதாகத் தெரிகிறது. சுமார் 13 மாநிலங்களில் 25 சதவிகிதத்திற்கும் குறைவான பள்ளிக்கூடங்களில்தான் பெண் குழந் தைகளுக்குத் தனி கழிப்பறைகள் காணப்படுகின்றன. சற்று ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால், 2003-ல் 28.24 சதவிகிதம் இருந்த நிலைமை 2006-ல் 37.42 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என் பது
2012 என்கிற இலக்கிற்குள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுக ளிலும் கழிவறை மற்றும் கழிவுநீர் வெளியேற்ற வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது உண்மை. மத்திய அரசு 60 சதவி கிதம், மாநில அரசு 20 சதவிகிதம் என்கிறவகையில் இதற்காக மானி யம் வழங்கவும் வழிகோலியுள்ளது. இந்தியாவிலுள்ள 578 மாவட்டங் களில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சுமார் ரூ. 13,424 கோடி ஒதுக் கியும் இருக்கிறது. அதனால்மட்டும் இலக்கை எட்டிவிட முடியுமா என்றால் சந்தேகம்தான்
மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சமீபத்தில் கூறியிருப்ப துபோல, இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கழிவறைகள் கட்டுவதற்கும் கழிவுநீர் வடிகால் வசதியை மேம்படுத்தவும் மட்டுமே செலவு செய்வது என்று தீர்மானித்தால் ஒருவேளை இலக்கு 2012-ல் இல்லாவிட்டாலும் 2022-லாவது எட்டுவது சாத்தியம்
நல்லதொரு ஆலோசனை. மக்கள் பிரதிநிதிகள் மனது வைத்தால், உலக நாடுகள் நம்மைப் பார்த்து கண்ணையும் மூக்கையும் பொத்தா மல் இருக்கும்படி செய்ய முடியும்!

 

 

One Response

  1. hi very good news

Leave a comment